போச்சு, வைகோ வந்ததால் 39 தொகுதிகளிலும் அதிமுகதான் ஜெயிக்கப் போகிறது.. பதறும் சு.சாமி
சென்னை: மதிமுகவை பாஜக கூட்டணியில் சேர்த்தது தவறு. இது சரிப்பட்டு வராது. இதனால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுகதான் ஜெயிக்கப் போகிறது என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்றார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள டிவிட் செய்தியில், தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணியை பாஜக அமைத்துள்ளது. ஆனால் இது முரண்பாடான கூட்டணி. இதனால் ஜெயலலிதா 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் வெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
சாமியின் இந்தக் கூற்று மதிமுகவினரை மட்டுமல்ல பாஜகவினரையும் கூட கடுப்பாக்கியுள்ளது. அவர்களும் சாமியின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவி்த்துள்ளனர்.
முரளிதரராவ் கருத்து
சென்னைக்கு வந்திருந்த பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் இதுகுறித்து கூறுகையில், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலுடன் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டதே மதிமுக - பாஜக கூட்டணி. அதுகுறித்து சாமி கருத்துக் கூற உரிமையே கிடையாது.
மதிமுகவுடனான பாஜக கூட்டணி தமிழகத்தில் பாஜகவை ஸ்திரப்படுத்த உதவும். மேலும் தமிழகத்தில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெறவும் அது உதவும். இதை வைகோவே கூறியுள்ளார். எனவே சாமி கருத்தை பெரிதுபடுத்தத் தேவையில்லை என்றார்.
முட்டாள்தனமாக பேசுகிறார் சாமி... அழகப்பன்
இதேபோல பாஜகவைச் சேர்ந்த நிர்வாகி எம்.வி.எம். அழகப்பன் கூறுகையில், சாமியின் கருத்து நான்சென்ஸ். முட்டாள்தனமாக அவர் பேசுகிறார். கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலுடன் தான் கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக பாஜக விவகாரங்களில் சாமி தலையிடக் கூடாது என்று ஏற்கனவே தமிழக பாஜக சார்பில் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மீறி சாமி தலையிட்டால் தமிழகத்தில் வெற்றிக் கூட்டணியை அமைக்க முடியாத நிலையே ஏற்படும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்தவர்தான் இந்த சாமி. அமெரிக்க அரசிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்தவர் இந்த சாமிதான். இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடைபெறாமல் தடுக்கத் தேவையான அத்தனை வேலைகளையும் இவர் செய்து வருகிறார் என்று சாடினார் அழகப்பன்.