சென்னையில் மாலையில் புழுக்கம்... நள்ளிரவில் கொட்டிய மழை...
சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. அதிகாலை வரை சாரல் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீலகிரி, காவிரி டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில், வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தஞ்சையில் வல்லம், நாஞ்சிக்கோட்டை, கும்பகோணம் நகர் பகுதிகளில் அதிகாலை பரவலான மழை பெய்தது.
திருவாரூர் நகரில் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை லேசான மழையும், அரியலூர் மாவட்டத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை மிதமான மழையும் பொழிந்தது.நீலகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று மாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
சென்னையின் நேற்று மாலைவரை வெயில் கொளுத்தியது இந்த நிலையில் நள்ளிரவில் பலத்த காற்று வீசியதோடு கனமழை பெய்தது. சேத்துப்பட்டு, எழும்பூர், புதுப்பேட்டை, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவு பலத்த காற்று வீசியது. இதை தொடர்ந்து மழை பெய்தது. கனமழையாக தொடங்கி அதிகாலை வரை சாரல் மழையாக பெய்தது. இந்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனிடையே வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.