துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு சம்மன்.. 'வராவிட்டால்' ஆள் இல்லாமலேயே விசாரணை தொடருமாம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களது போராட்டம் 100-ஆவது நாளை எட்டியது. இதையடுத்து பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றனர்.
அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்ததால் அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். எனினும் அவர்கள் பேரணி சென்றதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
விசாரணை ஆணையம்
இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அவர் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.
கிளாஸ்டன் பெயருக்கு சம்மன்
துப்பாக்கிச் சூட்டில் மேட்டுப்பட்டியை சேர்ந்த கிளாஸ்டன் என்பவர் உயிரிழந்தார். அவர் நேரில் ஆஜராகுமாறு அவரது வீட்டுக்கு அவரது பெயரில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
29-ஆம் தேதி ஆஜராக உத்தரவு
இந்த சம்மனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வரும் 29-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் தாங்கள் இல்லாமலேயே விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறு நடந்துவிட்டது
உயிரிழந்தவரின் பெயருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நகல், வாட்ஸ் ஆப், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது இறந்தவரின் பெயரை அடைப்புக்குறிக்குள் எழுதாததால் இதுபோன்ற தவறு நடந்துவிட்டதாகவும் அது கண்டுபிடிக்கப்பட்டு வேறு ஒரு சம்மன் அனுப்பப்பட்டு விட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.