சன் டி.வி லைசன்ஸ் சிக்கல்: ராஜ்நாத்சிங்குக்கு கலாநிதி மாறன் கடிதம்-'குறிவைத்து' நடவடிக்கை என புகார்
சென்னை: சன்குழுமம் எந்த தேசவிரோத நடவடிக்கையிலும், குற்றவியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. நாட்டின் சட்டதிட்டங்களை எப்போதும் கடைபிடித்து வந்துள்ளது. இதனால் சன் டி.வி. குழும சேனல்களுக்கான பாதுகாப்பு ஒப்புதல் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அந்நிறுவனத்தின் தலைவர் கலாநிதிமாறன் கடிதம் எழுதியுள்ளார்.
சன் குழுமத்தின் 33 சேனல்களுக்கான உரிமத்தை அடுத்த பத்து வருடங்களுக்கு புதுப்பிக்க கடந்த வருடம் விண்ணப்பித்திருந்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் "பாதுகாப்பு அனுமதி" சான்றிதழ் அளிக்க மறுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கலாநிதி மாறன் கூறியுள்ளதாவது:
குறிவைத்து நடவடிக்கை
சன் குழுமத்துக்கு பாதுகாப்பு ஒப்புதல் சான்றிதழ் வழங்க மறுத்துள்ளதற்கான காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த விவகாரத்தில் சன் டிவி மீது குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வழக்குகள் உள்ள தொலைக்காட்சிகள்
2ஜி ஸ்பெக்ட்ரம், பெட்ரோலியத் துறை தகவல் கசிவு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட வழக்குகளில் பல தொலைக்காட்சி, மற்றும் எஃப்.எம். வானொலி நிறுவனங்கள், குறிப்பாக மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களால் நடத்தப்படும் ஊடகங்கள் ஆகியவற்றின் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன, ஆனால் அந்த நிறுவனங்களுக்கான பாதுகாப்பு ஒப்புதல் வழங்கல் மறுக்கப்படவில்லை.
ஏலத்தில் பங்கேற்க அனுமதி
சிபிஐ, மற்றும் அமலாக்கப் பிரிவினர் தொடுத்துள்ள வழக்குகள் பல நிலுவையில் உள்ள நிறுவனங்கள் 3ஜி/4ஜி அலைக்கற்றை ஏலங்களில் ஒப்பந்தப் புள்ளிகளை அனுப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை இழந்த பல நிறுவனங்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கபிரிவினர் வழக்குகள் தொடர்ந்துள்ள போதும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்.
ரூ.600 கோடி வரி
சன் குழுமம் எந்த தேசவிரோத நடவடிக்கையிலும், குற்றவியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. சன் டிவி நெட்வொர்க் மட்டுமே ஆண்டொன்றுக்கு ரூ.600 கோடி வரி செலுத்தி வருகிறது. நாட்டின் சட்டதிட்டங்களை எப்போதும் கடைபிடித்து வந்துள்ளது.
5000 ஊழியர்களுக்கு பாதிப்பு
சன் குழுமத்தில் 5,000 பேர் நேரடியாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் பலர் மறைமுகமாக குழுமத்தினால் அன்றாட வாழ்க்கை அளவில் பொருளாதார ரீதியாக பயனடைந்து வருகின்றனர்.
பாதுகாப்பு ஒப்புதல்
எனவே உங்கள் உடனடி தலையீட்டினால் மட்டுமே அவர்கள் எதிர்காலம் பாதுகாக்கப்படும். எனவே பாதுகாப்பு ஒப்புதல்களை விரைவில் வழங்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கலாநிதிமாறன் கடிதத்தில் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications