நாளைக்குள் முடிவெடுக்காவிட்டால் "கேஸ்" போடலாம்.. தமிழக ஆளுநருக்கு சாமி திடீர் கெடு
நாளைக்குள் முடிவெடுக்காவிட்டால் ஆளுநர் மீது குதிரை பேரத்தை தூண்டியதாக வழக்கு போட முடியும் என்று சுப்பிரமணியம் சாமி திடீரென மிரட்டியுள்ளார்.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் நாளைக்குள் சசிகலா பதவியேற்பு தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் மீது வழக்கு போட முடியும் என்று சுப்பிரமணியம் சாமி மிரட்டியுள்ளார்.
ஆரம்பத்திலிருந்தே சசிகலாவுக்கு ஆதரவாக இருந்து வருகிறார் சாமி. அவருக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். டிவீட் போடுகிறார். தமிழக பொறுப்பு ஆளுநரின் செயல்பாடு குறித்தும் விமர்சித்து வருகிறார். மேலும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் கோழை என்று மோசமாக விமர்சித்துப் பேட்டி கொடுத்துள்ளார்.
முழுமையான சசிகலா ஆதரவாளராக மாறியுள்ள அவர் நேற்று ஆளுநரையும் சந்தித்து சசிகலாவுக்காக வாதாடிப் பார்த்தார். ஆனால் அவரது கோரிக்கைகளை ஏற்க ஆளுநர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது புதிய எச்சரிக்கை ஒன்றை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
The TN Guv must decide CM issue by tomorrow otherwise a WP under Art 32 of the Constitution can be filed charging abetment of horse trading
— Subramanian Swamy (@Swamy39) February 12, 2017
அதில், முதல்வர் பிரச்சினை தொடர்பாக தமிழக ஆளுநர் நாளைக்குள் முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குதிரை பேரத்தை தூண்டி விடுவதாக கூறி அவர் மீது அரசியல் சாசனச் சட்டம் 32வது பிரிவின் கீழ் ரிட் வழக்கு தொடர முடியும் என்று கூறியுள்ளார் சாமி.
சாமியின் இந்த திடீர் மிரட்டலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.