"ரெய்ன் ரெய்ன் கோ அவே".. விடாத மழையிலும் தி.நகரில் விறுவிறு தீபாவளி பர்ச்சேஸ்!
சென்னை: விடாத பெய்து வந்த மழையையும் பொருட்படுத்தாமல் சென்னையில் மக்கள் தீபாவளி பர்ச்சேஸில் ஈடுபட்டதால் தி.நகர், வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் கூட்டம் கட்டி ஏறியது.
இன்று மழை விட்டுள்ளதாலும், நாளை தீபாவளி என்பதாலும் கடைசி நேர தீபாவளி பர்ச்சேஸ் சூடு பிடித்துள்ளது. காலை முதலே மக்கள் கடைகளை மொய்க்க ஆரம்பித்து விட்டனர்.
தீபாவளிக் கூட்டம் முக்கிய இடங்களில்அலை மோதுவதால் தி.நகர், உள்ளிட்ட முக்கிய வணிக இடங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தி.நகரில்
வழக்கமாக தி.நகரில்தான் அதிக அளவில் கூட்டம் அலை மோதும். காரணம், இங்குதான் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் குவிந்துள்ளன.
துணி முதல் ஸ்வீட் வரை
ஜவுளி நிறுவனங்களின் கடலாக தி.நகர் காணப்படுகிறது. மேலும் அனைத்து வகையான பொருட்களையும் ஒரே பகுதியில் வாங்கி விடலாம் என்பதாலும் தி.நகரில் எப்போதுமே கூட்டம் பலமாக காணப்படும்.
ரஷ் நிறைந்த ரங்கநாதன்
ரங்கநாதன் தெருவில் வழக்கம் போல மக்கள் தலையாக காணப்படுகிறது. மழை நேரத்திலும் கூட மக்கள் விழுந்து விழுந்து தெருவை நிறைத்து விட்டனர்.
புரசைவாக்கம்
அதேபோல புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் தீபாவளிப் பொருட்களை வாங்கக் குவிந்ததால் அங்கும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
திருட்டுப் பசங்களைப் பிடிக்க
கூட்டத்தை பயன்படுத்தி பிக்பாக்கெட் அடிப்பது மற்றும் திருடும் சம்பவங்கள் நடக்கிறது. இதை தடுப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா, தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மாறு வேடத்தில்
மாறு வேட போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் என பல போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அடிக்கடி ஆய்வு நடத்தி வருகின்றனர். ஒலி பெருக்கி மூலம் "உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்‘‘ என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் செய்யப்படுகிறது.
தி.நகரில்
தி.நகரில் மட்டும் 2 துணை கமிஷனர், 3 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், 20 எஸ்ஐக்கள், 250 உள்ளூர் காவலர்கள், 200 ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 150 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 650 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புரசையில் 200 போலீஸார்
புரசைவாக்கத்தை பொறுத்தவரை அங்கு 200 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். புரசைவாக்கம் நெடுஞ்சாலை, டவுட்டன் சந்திப்பு, வெல்கம் ஓட்டல் சந்திப்பு மற்றும் வெள்ளாளர் தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். 3 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
வண்ணாரப்பேட்டையில் 60 போலீஸார்
வண்ணாரப்பேட்டையில் 2 உதவி கமிஷனர்கள், 6 இன்ஸ்பெக்டர்கள், 10 எஸ்ஐக்கள்
மற்றும் 60 போலீசார் பாதுகாப்புகாக நிறுத்தப்பட்டனர். எம்சி ரோடு அரிஹந்த் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் வீராஸ் டெக்ஸ்டைல்ஸ் முன்பு 2 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கடைசி நாள்.. மழை வேற இல்லை
இன்று தீபாவளி பர்ச்சேஸின் கடைசி நாள். நாளை தீபாவளி. எனவே மக்கள் கூட்டம் மிகப் பெரிய அளவில் இன்று அலை மோத ஆரம்பித்துள்ளது. இரவு விடிய விடிய கூட பர்ச்சேஸ் மற்றும் வியாபாரம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.