தமிழ்த் தேசிய பேரியக்கம்.. தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியின் புது அவதாரம்!
திருச்சி: பெ. மணியரசன் தலைமையிலான தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியின் பெயர் தமிழ்த் தேசிய பேரியக்கம் என்று மாற்றப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய பேரியக்கம் என்ற பெயர் மாற்றத்துடன் இக்கட்சியின் 7வது சிறப்பு பொதுக்குழு கூட்டம் திருச்சியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்த்தேச பொதுவுடைமை கட்சி எனும் பெயரை தமிழ்த் தேசிய பேரியக்கம் என்று பெயர் மாற்றப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து மணியரசன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தமிழ்நாட்டின் தொழில், வணிகம், வேலைவாய்ப்பு முதலியவற்றில் பிற மாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நாகலாந்து, அருணாசலப் பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் வெளிமாநிலத்தவர் வந்து குடியேறுவதை அனுமதி வழங்குவதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதே அதிகாரத்தை தமிழக அரசுக்கும், இந்திய அரசு வழங்க வேண்டும்.
திருச்சி பெல், துப்பாக்கி தொழிற்சாலை, சென்னை ஆவடி படைக்கலன் தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரி மற்றும் அனல் மின் நிலையம், தென்னக ரயில்வே, வருமானவரி மற்றும் உற்பத்தி வரி அலுவலகங்களில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர். எனவே தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்புகளை தமிழக மக்களுக்கே வழங்கவேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, "வெளியார் அதிகரிப்பும், தமிழர் வாழ்வுரிமையும்" எனும் தலைப்பில் செப்டம்பர் 28ஆம் தேதி சென்னையில் மாநாடு நடத்தவுள்ளோம்.
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். கச்சத்தீவை திரும்பபெற வேண்டும். இலங்கை அரசுக்கு எதிராக பன்னாட்டு பொருளாதார தடை விதிக்க வேண்டும். மொழிப்போர் தியாகி கீழப்பழூர் சின்னச்சாமியின் உருவ சிலையை உடனடியாக திறக்கவேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications