இமயத்தை விட உயர்ந்த தமிழை பரப்ப வடக்கில் 500 சிறப்பு மையங்கள்!- தருண் விஜய்
சென்னை: இமய மலையை விட உயர்வான தமிழ் மொழியை வட மாநிலங்களில் பரப்ப முதல் கட்டமாக 500 சிறப்பு மையங்களை உருவாக்கப் போவதாக உத்தரகாண்ட் பாஜக எம்பி தருண் விஜய் கூறினார்.
தமிழுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் தருண் விஜய் எம்.பி.க்கு கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் பாராட்டு விழா நேற்று நடத்தப்பட்டது. விழாவில் தருண் விஜய் பேசியதாவது:
உத்திரகாண்ட் மாநிலம் டேராடூனில் பிறந்தாலும், தமிழ் அன்னையின் மகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
இலக்கியங்கள், காப்பியங்கள் நிறைந்த தமிழ் மொழியில் திருக்குறள் ஒரு பொக்கிஷமாகும். திருக்குறளையும், திருவள்ளுவரையும் தெரியாதவர்கள் இந்தியாவைப் பற்றி தெரிந்திருக்க முடியாது. உலக அளவில் பெருமைப்படும் தமிழ் மொழி பிறந்த தமிழ்நாட்டிலேயே, தமிழ் மொழி பேச மறுக்கின்றனர்.

வழக்காடு மொழியாக தமிழ்
குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இல்லாதது வருத்தமளிக்கிறது. வடமாநில உயர் நீதிமன்றங்களில் இந்தி வழக்காடு மொழியாக இருக்கிறது. குஜராத்தில் குஜராத்தி வழக்காடு மொழியாக உள்ளது. தமிழகத்தில் தமிழில் தீர்ப்பு வழங்குவதில் என்ன தயக்கம்? பாமர மக்களுக்கு புரியாத மொழியான ஆங்கிலத்தில் தீர்ப்புகள் வழங்கப்படுவது வேதனை அளிக்கிறது.
தமிழ் இன்றி இந்தியா முழுமை பெறாது. அதே நேரம் தமிழர்கள் மீது வேறு மொழிகளைத் திணிப்பதும் சரியல்ல. தேசத்தின் பாரம்பரிய மொழிகள் காக்கப்பட வேண்டும்.
இமயமலையை விட உயர்ந்தது
இமயமலையை விட உயரமான தமிழ்மொழியை நாடு முழுவதும் எடுத்து செல்வதற்காக, முதல் கட்டமாக வட மாநிலங்களில் 500 இடங்களில் தமிழ்மொழி கற்பிக்கும் மையங்கள் வரும் ஜனவரி மாதத்திற்குள் தொடங்கப்பட உள்ளன. அதுவும் டேராடூனிலிருந்தே முதல் மையம் தொடங்கப்படும். என் சொந்த ஊரில் தமிழ்ப் பள்ளியும் தொடங்கவிருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications