பவானி ஆற்றின் கரையில் சாயப்பட்டறை அனுமதியை ரத்து செய்யுங்க.. சட்டசபையில் செங்கோட்டையன் கோரிக்கை!
சென்னை: கோபிசெட்டிபாளையம் பவானி ஆற்றின் கரையில் சாயப்பட்டறை செயல்படுவதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. சட்டசபையில் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, சாயப்பட்டறையின் கழிவுகள் ஆற்றில் திறந்துவிடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
தமிழக சட்டசபையில் மார்ச் 14-ந் தேதி நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து வேளாண் நிதி நிலை அறிக்கை தனியே தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரு நிதிநிலை அறிக்கைகள் மீது நடைபெற்ற விவாதங்களில் எம்.எல்.ஏக்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். இதற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னாசு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலளித்தனர்.

இதனையடுத்து கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது. கடந்த 2 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் சட்டசபை இன்று மீண்டும் கூடியது.
சட்டசபையின் தொடக்கத்தில் பல்வேறு துறைசார்ந்த கோரிக்கைகளை எம்.எல்.ஏக்கள் முன்வைத்தனர். பவானிசாகர் ஆற்றுப் பகுதியில் சாயப்பட்டறை இயங்க வழங்கப்பட்ட அனுமதியை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ. செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, பவானி ஆற்றின் கரையில் இருந்து 500மீ தூரத்தில் சாயப்பட்டறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் இருந்து கழிவுகள் வெளியேறுவது சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. விதிகளை மீறும் ஆலைகள் மீது கடுமையான நடடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தேனி - மதுரை நெடுஞ்சாலையில் ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் மிக மெதுவாக நடக்கிறது. விரைவு படுத்த வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி, அந்த திட்டப் பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் சேலம் மாநகரைச் சுற்றி 45 கி.மீ நீளத்திற்கு சுற்றுச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வில் உள்ளது என்று பாமக எம்.எல்.ஏ. அருள் எழுப்பிய கேள்விக்கும் அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார்.
இதேபோல பொன்னேரி தாலுகாவை பிரிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். நிதியமைச்சர் நிதி ஒதுக்கினால், நிச்சயம் பிரிக்க வாய்ப்பு உள்ளது என எம்.எல்.ஏ. சுதர்சனம் வலியுறுத்தினார். இதற்கு, வட்டங்கள் பிரிப்பதற்கான கோரிக்கைகள் பல வந்திருக்கின்றன. நிதி நிலைக்கு ஏற்ப இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications