அங்கிட்டு அமைச்சரவைக் கூட்டம்.. இங்கிட்டு திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. நாளை சட்டசபைக் கூடுகிறது!
தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பட்ஜெட் மானியக்கோரிக்கைகளை பற்றி விவாதிக்க தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. எதிர்கட்சி எம்எல்ஏக்களின் கேள்விகளை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றி விவாதிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை இன்று கூடியது.
அதே நேரத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்களை கேள்வி கேட்டு திணறடிப்பது எப்படி என்று பயிற்சி கொடுப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

சட்டசபைக் கூடுகிறது
நாளை ஜூன் 14 ஆம் தேதியிலிருந்து ஜூலை 19 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. மொத்தம் 24 நாள்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்துத்துறைகளுக்குமான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளம்பும் பிரச்சினை
ஆளும்கட்சி எம்எல்ஏக்களே ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்திருக்கிறார்கள். ஓபிஎஸ் அணியில் 12 எம்எல்ஏக்கள் இருகின்றனர். சகிகலா அணியில் இருந்த 122 எம்எல்ஏக்களும் டிடிவி தினகரன் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி என பிரிந்திருக்க யார் எந்த அணியில் இருக்கிறார்கள் என்பதே பலருக்கும் சந்தேகமாக உள்ளது. சட்டசபையில் யார் என்ன பிரச்சினையை கிளப்புவார்களே என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அனல் கிளம்பும்
கலப்பட பால், கலப்பட அரிசி பிரச்சினை, குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சியினர் தயாராகி வருகின்றனர். எதிர்கட்சியினரின் கேள்விகளை எப்படி சமாளிப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
தினகரனுக்கு ஆதரவாக 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர். நாளை கூடும் சட்டசபையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெட்டு தீர்மானம் கொண்டு வந்தால் பழனிசாமி அரசு கவிழ்வது உறுதியாகிவிடும். இதனால் எடப்பாடி பழனிசாமி உச்சக்கட்ட பதற்றத்தில் இருக்கிறார்.

மானியக்கோரிக்கை
சட்டசபையில் மானியக் கோரிக்கையில் எந்தக் கட்சியில் எத்தனை பேர் பேசவேண்டும் என்பதில் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ள நடைமுறை பின்பற்றப்படும். வெட்டுத் தீர்மானங்களும் தரப்பட்டுள்ளன. அதுபற்றி அந்தந்த உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று சபாநாயகர் கூறியுள்ளார். சட்டசபையில் தி.மு.க.வினரின் செயல்பாடு தொடர்பான பிரச்சினை உரிமைக்குழுவுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. அது பரிசீலனையில் உள்ளது. கருணாநிதியின் வைரவிழா பற்றிய தி.மு.க.வின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டம்
நாளை சட்டசபை கூட உள்ள நிலையில் இன்று மாலை அமைச்சரவை கூடுகிறது. இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் 4வது அமைச்சரவைக் கூட்டமாகும். இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டசபைக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. நீட் தேர்வு, குறுவை சாகுபடி பாதிப்பு பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த பங்காளி எம்எல்ஏக்கள் எப்படி சமாளிப்பது என்றும் பயிற்சி அளிக்கப்படும்.

அறிவாலயத்திலும் கூட்டம்
சட்டசபையில் எந்த அமைச்சரிடம் என்ன மாதிரியான கேள்விகளை எழுப்பவேண்டும், யார் யார் பேசவேண்டும், கருணாநிதி வைர விழாவைப் பற்றி சட்டசபையில் எப்படி பேச வேண்டும் என்றும் பயிற்சி தருவதற்காக எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

மசோதாக்கள் நிறைவேற்றம்
மானியக் கோரிக்கைகளின் மத்தியில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. மானியக் கோரிக்கையின் போதே சில மசோதாக்கள் நிறைவேற்றப்படும். மீதியுள்ள மசோதாக்கள் சட்டசபை கூட்டத் தொடரின் இறுதி நாளில் நிறைவேற்றப்படும்.

எக்கச்சக்க எண்டர்டெயின்மெண்ட்
கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் வெளிநடப்புகள், வெளியேற்றங்கள், அடிதடி கலாட்டாக்கள் அரங்கேறின. எதிர்கட்சித்தலைவரின் சட்டையே கிழிக்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் நாளை கூட உள்ள சட்டசபை கூட்டத் தொடரில் ஏராளமான எண்டர்டெயின்மெண்ட்களை எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications