பிரபாகரன் கொல்லப்பட்டபோது யார் ஆட்சி?.. வெற்றிவேல் பேச்சுக்கு திமுக கடும் எதிர்ப்பு- அமளி
சென்னை: சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ வெற்றிவேலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான 2ம் நாள் விவாதமும் கடும் அமளிக்கிடையே நடைபெற்று வருகிறது. இலங்கை தமிழர்கள் பிரச்சினை, மீத்தேன் திட்டம் குறித்து பெரம்பூர் அதிமுக எம்.எல்.ஏ வெற்றி வேல் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 16ம்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனை அடுத்து நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் வருகிற 23ம் தேதி வரை கூட்டத்தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டது. 17ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, சபை ஒத்திவைக்கப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், கூட்டம் நடைபெறவில்லை.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. முதல்நாள் விவாதத்தை அதிமுக எம்.எல்.ஏ செம்மலை தொடக்கி வைத்து பேசினார். கருணாநிதி பற்றியும், திமுகவினர் பற்றியும் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்றைய விவாதம் காரசாரமாக நடைபெற்றது.
2ம் நாள் விவாதம் சட்டப்பேரவையில் இன்று தொடங்கியுள்ளது. பெரம்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் 2ம் நாள் விவாதத்தை தொடங்கி வைத்து பேசி வருகிறார். இன்றைய விவாதம் ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கியது.
எம்.எல்.ஏ வெற்றிவேல், தனது உரையில் 23ம் புலிகேசி போல சட்டசபை தேர்தலில் பிரச்சாரத்திற்கு சென்றவர்களை மக்கள் புறந்தள்ளி விட்டதாக குறிப்பிட்டார். மேலும் அவர் பிரபாகரன், விடுதலைப்புலிகள் கொல்லப்படும் போது யாருடைய ஆட்சி நடைபெற்றது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் அவர் விவசாயிகளுக்கு எதிராக மீத்தேன் திட்டம் திமுக ஆட்சி காலத்தில்தான் கொண்டு வரப்பட்டது என்றும் பேசினார்.
வெற்றிவேல் எம்.எல்.ஏவின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமளியிலும் ஈடுபட்டனர். அப்போது எழுந்த எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், மீத்தேன் திட்டத்திற்கு திமுக ஆட்சி காலத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்டது என்றும், அதற்கு அதிமுக ஆட்சியில்தான் அனுமதி கொடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையில் இலங்கை பிரச்சினை எதற்கு என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அப்போது எழுந்த அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம், ஆளுநர் உரையில் இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அவையில் அமளியில் ஈடுபடும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை தேவை என்று சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை வைத்தார். அவையில் வெற்றிவேல் தொடர்ந்து பேசி வருகிறார்.
முன்னதாக இன்று சட்டசபை தொடங்கிய உடன், திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்து நேற்று அதிமுக உறுப்பினர் பேசியது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதா என பேரவை தலைவர் தனபாலிடம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.