முதல்வர் ஓபிஎஸ் உடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே. ராஜேந்திரன் ஆலோசனை
முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கிரீன்வேஸ் சாலையில் வசித்து வருகிறார். அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டாலும் காபந்து முதல்வராக இருக்கிறார். தலைமைச் செயலகத்திற்கு செல்லாமல் தனது பணிகளை வீட்டில் இருந்தே கவனித்து வருகிறார் ஓ.பன்னீர் செல்வம்.
முதல்வர் ஓபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இடையே கடும் போர் நிலவி வருகிறது. கடந்த இரு தினங்களாக அவர் தலைமைச் செயலகம் செல்லவில்லை. எராளமான முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். இந்த நிலையில் முதல்வருடன் அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இன்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டிற்கு நேரில் வந்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
விசாரணை கமிஷன் அமைப்பது தொடர்பாகவும், சென்னை கலவரம் தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்தி வருவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.