சாலை விபத்துகளில் தமிழகம்தான் முதலிடம் – ஆண்டுக்கு 16 ஆயிரம் பேர் பலி!
நெல்லை: தமிழகத்தில்தான் விபத்துகள் அதிக அளவில் நடக்கின்றன.அதனால் ஆண்டுக்கு 16,000 பேர் பலியாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மருத்துவ சங்க நெல்லை கிளை சார்பில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காட்சி பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இக் கண்காட்சியை இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் அகில இந்திய அளவில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இச்சட்டத்தை செயல்படுத்த 3 கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்தபின்னர் ஒரே விதமான விதிமுறைகள் பின்பற்றப்படும். தனியார் மருத்துவமனைகளை ஆய்வுசெய்ய தனிநபராக யாரும் வரக்கூடாது, குழுவாக வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 23 ஆம் தேதி, கிட்டத்தட்ட 148 கிளைகளில் ரத்ததான முகாம் நடத்தப்பட உள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் முகாமை ஆளுநர் ரோசய்யா துவக்கி வைக்கிறார்.
உலக அளவில் இந்தியாவில்தான் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது. இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிகம். தமிழகத்தில் ஆண்டுக்கு 16 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். 40 சதவீதம் பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழக்கின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications