தமிழகத்தில் வறட்சி இல்லையா? அண்ட புளுகு புளுகும் தமிழக அரசு!
தமிழகத்தில் முழு வறட்சி இல்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அண்ட புளுகு புளுகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் முழு வறட்சி இல்லை என தமிழக அரசு சென்னை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த பொய் மூட்டைக்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பருவ மழை பொய்த்துப் போனதால் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி ஏற்பட்டது. கர்நாடக அரசும் காவிரியில் தமிழகத்திற்கான நீரை முறையாக திறந்துவிடவில்லை.
இதனால் தமிழகத்தில் காவில் பாசன மாவட்டங்கள் உட்பட பெரும்பாலான பகுதிகளில் சம்பா மற்றும் குறுவை சாகுபடி பொய்த்துப்போனது. மழை மற்றும் காவிரி நீர் இல்லாததால் சில விவசாயிகள் மோட்டர் பம்புகளை நம்பி விவசாயம் செய்தனர்.

வறட்சியால் மாண்ட விவசாயிகள்
ஆனால் போதிய மழை இல்லாமல் போனதால் நிலத்தடி நீரும் குறைந்து பயிர்கள் நீரின்றி கருகி போயின. கடன்வாங்கி விவசாயம் செய்த நிலையில் பயிர்கள் கருகியதால் கடன்காரர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ஏராளமான விவசாயிகள் தூக்கிட்டும் விஷம் குடித்தும் தற்கொலை செய்துகொண்டனர்.

ஒப்புக்கொள்ளாத தமிழக அரசு
பல கருகிய பயிரைக் கண்டு மாரடைப்பில் மாண்டனர். ஆனால் விவசாயிகள் சொந்தப் பிரச்சனையாலும் காதல் தோல்வியாலும் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறினர் தமிழக அமைச்சர்கள். வறட்சிக்காரணமாக இந்த ஆண்டு மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
இதையடுத்து தமிழக விவசாயிகள் தற்கொலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

தமிழகத்தில் வறட்சி இல்லை
அப்போது தமிழகத்தில் முழு வறட்சி இல்லை என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெறும் 17 பேர் மட்டும் தான் வறட்சி காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

குடிநீருக்கே திண்டாட்டம்
தமிழக அரசின் இந்த பதில் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிநீருக்கே வழியின்றி மக்கள் குடத்துடன் திண்டாடும் நிலையில் முழு வறட்சி இல்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications