தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் பேஸ்புக்கில் பதிவு !
சென்னை: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேஸ்புக் பதிவில் கூறியுள்ளது:
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் முறைகேடான அரசாங்கத்தை கண்டித்து பாடிய ஒரே காரணத்துக்காக கைது செய்யப்பட்ட கிராமிய பாடகர் கோவன் மீதான அதிமுக அரசின் வன்முறை தொடர்கிறது. நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் கோவன் ஆஜர்படுத்தப்பட்ட போது அந்த செய்தியை சேகரிக்க அங்கு வந்த பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறையினர் ஏவப்பட்டு பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
மனித உரிமைகளை இழிவுபடுத்தி, சட்டத்துக்கு புறம்பான, அரசியலமைப்புக்கு எதிரான, ஊழல் மிகுந்த ஒரு ஆட்சியை தமிழகம் இப்போது எதிர்கொண்டு வருவது இதன் மூலம் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
வருமானத்தை மீறி சொத்து குவித்த வழக்கில் சிக்கி உச்சநீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டு வரும் ஜெயலலிதாவும், சசிகலாவும் அதனைப்பற்றி துளி கூட கவலைப்படாமல் தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களை மிரட்டி பலரது சொத்துக்களை கைப்பற்றி வருகின்றனர். ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் சசிகலா குடும்பத்தினரால் வாங்கப்பட்ட ஒரேயொரு சம்பவம் மட்டுமே ஊடகத்துறையால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இருள் சூழ்ந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களின் காலத்தில் கூட ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்த பிறகே சர்ச்சைக்குரிய விஷயங்கள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டன. ஆனால் இன்று ஜெயலலிதாவின் ஆட்சியில் பொதுமக்கள் கேள்வி கேட்பதையும், விமர்சனம் செய்வதையும் சகிக்க முடியாமல் காவல்துறை ஏவப்படும் அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது.
ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் என குறிப்பிடப்படும் நான்கு துறைகளும் ஜெயலலிதா மற்றும் சசிகலா குடும்பத்தினரால் மிரட்டப்பட்டு தவறாக பயன்படுத்தப்படுகிறது. நீதித்துறை, அரசியல், காவல் உள்ளிட்ட அரசுத்துறைகள், பத்திரிக்கை துறை என அத்தனை துறைகளும் அதிமுகவின் அதிகார திமிருக்கு முன்பாக கைகட்டி, வாய்பொத்தி நிற்கின்றன.
சட்டமன்றத்தில் எதிர் கட்சியினர் பேச வாய்ப்பே அளிக்காத நிலை, கேள்வி கேட்பவர்கள் மீது பொய் வழக்குகள் போடுதல், நேர்மையான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை செயல்படவிடாமல் தடுத்து அதிகாரமற்ற பதவிகளில் அமர்த்துவது, ஊடகத்தினரின் மீதான ஒடுக்குமுறை ஆகியவை மட்டுமே கடந்த நான்கரை ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளாக அரங்கேறி வருகிறது.
தமிழகம் முழுவதும் நான் மேற்கொண்டு வரும் "நமக்கு நாமே" விடியல் மீட்பு பயணத்தின் மூலமாக அ.தி.மு.க., அரசின் அராஜக ஆட்சியின் விளைவுகளையும், அலட்சிய போக்கு குறித்தும் முழுவதுமாக அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த பயணத்தில் பெற்ற மனதை வருத்தும் சில தகவல்களும், அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்களும் நிறைந்த பயண அனுபவங்கள் எனது உள்ளத்தை பாதித்து தூங்க விடாமல் தடுக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தால், தங்களுக்கு வாக்களித்த அதே மக்களை அவமதித்து, காலால் மிதித்து துவைக்க எப்படி முடிகிறது? திராவிட இயக்கத்தின் வேர் என்ற உரிமையை கோரியபடியே நமது மக்களின் உரிமைகளை பறித்து, சித்தாந்தங்களை இவ்வாறெல்லாம் எப்படி ஒரு கட்சியால் அவமதிக்க முடிகிறது?
இப்படியொரு மூர்க்கத்தனமான அரசாங்கத்தை தமிழ்நாடு சந்திப்பது இதுவே இறுதியாக இருக்கட்டும். இனியாவது உண்மைகளை உணர்ந்து மக்களாட்சி மலரட்டும். போலியான வாக்குறுதிகளை நம்பி தங்கள் சுதந்திரத்தையும், சுய மரியாதையையும் அடமானம் வைத்து நாட்டின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் தடுக்கும் அவலம் இனியும் தொடர கூடாது.
அதிமுக என்ற கொடுங்கோலாட்சியின் முடிவு ஏற்கனவே தொடங்கி விட்டது. தமிழக மக்கள் விழிப்படைந்து விட்டனர். புதிய விடியலில் முளைக்கும் புது வெள்ளியாக உதயசூரியன் மீண்டும் உதிக்கட்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.