காவிரிக்கு குறுக்கே கர்நாடகா அணை கட்ட அனுமதிக்க கூடாது! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
சென்னை: காவிரிக்கு குறுக்கே கர்நாடகா அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
காவிரிக்கு குறுக்கே மேக்கேதாட்டு (ஆடு தாண்டும் பாறை) என்ற பகுதியில் இரு அணைகளை கட்டி சுமார் 48 டிஎம்சி தண்ணீரை சேகரிக்க கர்நாடகா திட்டமிட்டுள்ளதாக அம்மாநில நீர்வள அமைச்சர் எம்.பி.பாட்டீல் சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே, இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை இருந்து வரும் நிலையில், காவிரியின் குறுக்கே மேலும் இரு அணைகளை கட்ட கர்நாடகம் தீர்மானித்து இருப்பதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதை தொடர்ந்து, காவிரியில் கர்நாடகம் புதிய அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் புதிய அணை கட்டும் கர்நாடகாவின் திட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் காவிரியில் கர்நாடகம் அணைகட்டுவது நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னதாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்த அறிக்கையில், காவிரிக்கு குறுக்கே கர்நாடகா புதிதாக ஒரு அணை கட்டப்போவதாக அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மேலும், அணை கட்டுவதை தடுக்குமாறு பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா குடிநீர் திட்டங்கள், நீர்மின் திட்டங்களை காவிரி நதிநீரை பயன்படுத்தி செயல்படுத்த கூடாது என்றும் பிரதமருக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வனத்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சகங்கள், கர்நாடகாவின் புதிய திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.