தமிழகம் அமைதிப் பூங்கா... ஜெ. பாணியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி
இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க பாடுபட வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை: தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்றும் ஆட்சியர்களும் காவல்துறையினரும் விழிப்போடு இருந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டுக்கு என்றே தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட கூட்ட அரங்கில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
3 நாட்கள் நடைபெறும் மாநாட்டினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து பேசினார். இன்றைய மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள், ஐஜிக்கள், டி.ஐ.ஜிக்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகம் அமைதிப்பூங்கா
மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை அதிகாரிகளும் விழிப்போது செயல்பட்டு சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டும் என்றார். தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. தமிழகத்தை முதன்மையான மாநிலமாக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பாடுபட வேண்டும். பொதுமக்களுக்கு வெளிப்படையாக பணியாற்ற வேண்டும் அரசின் நலத்திட்டங்களை மக்களை சென்றடைய அதிகாரிகள் பாடுபட வேண்டும்.
கண்களைப் போல செயல்படுங்கள்
பயங்கரவாதம், மதவாதம், இடதுசாரி தீவிரவாதம் மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.
வழிப்பறி கொள்ளைகள், நகைப்பறிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ரோந்துப்பணிகளை அதிகரிக்க வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்புக்கு இரு துருவங்களைப் போல இல்லாமல் இது கண்களைப் போல பணியாற்ற வேண்டும்.
காவலர்களே பொறுப்பு
பொது இடங்களில் இளைஞர்கள் ஆயுதங்களால் அச்சுறுத்தினால் படும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குட்கா, தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட காவல்நிலைய காவலர்களே பொறுப்பு.
கந்து வட்டி கடும் நடவடிக்கை
பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மீது நடவடிக்கை சூதாட்டம் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட காவல்நிலைய காவலர்களே பொறுப்பு. கந்து வட்டி புகார்கள் மீது அதீத வட்டி வசூலித்தல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் சேமிப்பு பணம்
கோவில்களில் தீ விபத்து நடைபெறாவண்ணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்
பொதுமக்களின் சேமிப்பு பணத்தை ஏமாற்றுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைகளில் கண்காணிப்பை அதிகாரித்து குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
ஜெ. பாணியில் ஈபிஎஸ்
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு நடைபெறும் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்றும், அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்று பேசுவார். அதே பாணியில் எடப்பாடி பழனிச்சாமியும் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகளுக்கு விருதுகள்
நாளை நடக்கும் இரண்டாம் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மட்டும் பங்கேற்பார்கள். இறுதி நாள் நிகழ்வில் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மட்டும் கூட்டம் நடத்தப்படுகிறது. முடிவில், சிறந்த ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை, வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றுவது, திட்டங்களை நிறைவேற்றுவதில் எழும் சிக்கல்களை சமாளிப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.