தமிழகத்தில் தொடங்கியது பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டம்.. வாகன ஓட்டிகளே முந்துவீர்!
ஆயில் நிறுவனங்கள் கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் பெட்ரோல், டீசல் உரிமையாளர்கள் இரண்டு நாட்கள் கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : மத்திய அரசு அறிவித்த கமிஷன் உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இன்றும், நாளையும் கொள்முதல் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.1000 கோடி வர்த்தகம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை ஆயில் நிறுவனங்களின் 4,400 பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

அகில இந்திய பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் கடந்த 15 ஆண்டுகளாக கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடமும், பொதுத்துறை ஆயில் நிறுவனங்களிடமும் கோரிக்கை விடுத்து வந்தது.
2010 ஆம் ஆண்டு பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு எவ்வளவு கமிஷன் தொகை வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்ய மத்திய அரசு பெட்ரோலிய அமைச்சகத்தின் இணை செயலாளர் அபூர்வா சந்திரா தலைமையில் ஒரு குழு அமைத்து இந்தியா முழுவதும் மண்டல அளவில் ஆய்வு செய்து விளிம்பு தொகையை நிர்ணயம் செய்ய விதிமுறைகளை மத்திய அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தனர். 2011 ஆம் ஆண்டு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என பொதுத்துறை ஆயில் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
ஆனால் ஆயில் நிறுவனங்கள், குழுவின் பரிந்துரையை முழுமையாக செயல்படுத்தாமல், காலதாமதம் செய்து வருகின்றனர். ஆயில் நிறுவனங்கள் கொடுக்கும் கமிஷன் தொகை கொண்டு 24 மணி நேரமும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது டீசர்களின் புகாராகும்.
இதனால் பெட்ரோல் சில்லரை விற்பனையாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. பலர் தொழில் செய்ய முடியாமல் கடனில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பலர் விற்பனை நிலையங்களை நடத்த முடியாமல் மூடிவிட்டதாகவும் விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.34ம், டீசல் லிட்டருக்கு ரூ.1.52ம் விற்பனையாளர்களுக்கு கமிஷன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கடந்த 2011ம் ஆண்டு, சில்லரை விற்பனையாளர்களுக்கான கமிஷன் தொகையை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.20ம், டீசல் லிட்டருக்கு 77 பைசாவும் உயர்த்தி வழங்க உத்தரவிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக ஆயில் நிறுவனங்கள், இந்த கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கவில்லை.
மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டபடி கமிஷன் தொகையை வழங்க வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக ஆயில் நிறுவனங்களிடம் சில்லரை விற்பனையாளர்கள் கேட்டு வந்தனர். ஆனால் ஆயில் நிறுவனங்கள் கமிஷன் தொகையை வழங்காமல் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர்.
இதனால் ஆயில் நிறுவனங்களின் போக்கைக் கண்டித்து, தேசிய அளவில் அனைத்து மாநிலங்களின் கூட்டமைப்பான (சி.ஐ.பி.டி.) சார்பில் வேலை நேரம் குறைப்பு மற்றும் விடுமுறை அறிவிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்பேரில், தமிழத்தில் உள்ள 4,400 பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் முதல் கட்டமாக அக்டோபர் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை 15 நிமிடங்களுக்கு மின்விளக்குகள் அனைத்து விற்பனை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. எனினும் கமிஷன் தொகை உயர்த்தி வழங்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
இதை கண்டித்து இன்றும், நாளையும் ஆயில் நிறுவனங்களின் முனையங்களில் இருந்து பெட்ரோல் கொள்முதல் செய்வதை நிறுத்தி, பங்க் உரிமையாளர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.1000 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த போராட்டங்கள் அனைத்தும் பெட்ரோலிய சில்லரை விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம் தான் தவிர, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த அல்ல என்று பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications