கஞ்சா விற்பனை பற்றி தகவல் கூறலாம்! தமிழக காவல்துறை தொலைபேசி எண் அறிவிப்பு! கஞ்சா வேட்டை 4.0!
சென்னை: கஞ்சா விற்பனை பற்றியும், கஞ்சா பதுக்கல் குறித்தும் தகவல் கூற தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளது தமிழக காவல்துறை.
தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு விரைவில் ஓய்வுபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தான் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழக காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

''தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, 2021-ம் ஆண்டு முதல் 'கஞ்சா வேட்டை' நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 20 ஆயிரத்து 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25,721 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே கடந்த ஏப்ரல் 3-ந்தேதி இரவு முதல் "கஞ்சா வேட்டை 4.0" அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன்படி குன்றத்தூரில் நடைபெற்ற வாகன சோதனையின் போது ரூ.1 கோடி மதிப்புள்ள 22 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட 7 சரக்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே கஞ்சா பதுக்கி வைப்பவர்கள், விற்பர்கள் குறித்து 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலும் [email protected] என்ற மின்னஞ்சல் வழியாகவும் தகவல் தெரிவிக்கலாம்.'' இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.
எல்லாம் சரி கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளிப்போருக்கு தேவையான பாதுகாப்பை காவல்துறையினர் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை களையெடுக்க உயர் அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications