தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை என அறிவித்துவிட்டு தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கிய இலங்கை!
ராமேஸ்வரம்: லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மீனவர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக இலங்கை அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான போதும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை கொடூரத் தாக்குதலை நடத்தி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்தாலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை சுட்டுக் கொல்வது, கைது செய்வது, படகுகளை கைப்பற்றுவது, நடுக்கடலில் தாக்குவது என கொடூரங்களை நிகழ்த்துகிறது. ஆனால் நமது நாட்டின் கடற்படையும் கடலோர காவல்படையும் இவற்றைத் தடுக்கவே இல்லை என்பது மீனவர்களின் குற்றச்சாட்டு.

இந்த நிலையில் திடீரென மீனவர்கள் துயரத்துக்கு காரணமே கச்சத்தீவை காங்கிரஸ், திமுக இலங்கைக்கு கொடுத்ததுதான் என பாஜக தேர்தல் பிரசாரத்தில் பல்லவி பாடியது. இது பெரும் விவாதங்களையும் கிளப்பியது.
கச்சத்தீவை இந்தியா மீட்கும் என்கிற வாக்குறுதியும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால் இலங்கை அரசோ, கச்சத்தீவை திரும்ப தரமாட்டோம் என்கிறது. இது தொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகையில், கச்சத்தீவை திரும்ப பெறுவது தொடர்பாக இந்தியா எதுவும் தெரிவிக்கவில்லை. தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக ஏப்ரல் 21-ந் தேதி தமிழ்நாடு முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்றார்.
இது தொடர்பாக ராமேஸ்வரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரும் 21-ந் தேதி முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார். அப்போது மீனவர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்கப்படும் என்றார்.
தற்போது ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படை கொடூரமாகத் தாக்கி இருக்கிறது. இதில் மீனவர்கள் படுகாயமடைந்தனர். ரத்தம் சொட்ட சொட்ட நடுக்கடலில் உயிருக்குப் போராடிய மீனவர்களை அடித்தே விரட்டி அனுப்பியிருக்கிறது இலங்கை கடற்படை. இது தமிழ்நாட்டு மீனவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications