ஊழல் 'போதை' உச்சத்தில் தமிழகத்தின் "டாஸ்மாக்"!!
சென்னை: தமிழகத்தில் மதுபான தயாரிப்பு நிறுவனங்களானாலும் விற்பனை செய்யும் கடைகளானாலும் ஊழலின் உறைவிடமாகத்தான் இருந்து வருகிறது.
இந்திய அளவில் மது குடிப்போரில் தமிழகத்தின் பங்கு என்பது 17% ஆக இருக்கிறது. தமிழகத்தில் கள்ளச்சாராய சாவுகளைத் தடுக்க 1983 ஆம் ஆண்டு அப்போதைய எம்.ஜி.ஆர் அவர்களால் 2 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இதில் ஒன்று டாஸ்மாக், மற்றொன்று டாஸ்கோ. கள்ளச் சாராயத்தை அறவே ஒழித்து ஏழைகளின் நலன் காக்க இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இதில் டாஸ்கோ என்பது மதுபானம் தயாரிக்கும் நிறுவனமாகும். டாஸ்மாக் என்பது மதுபானம் கொள்முதல் நிறுவனம்.
ஆனால் 1987-ல் இந்த டாஸ்கோ கைவிடப்பட்டு மதுபான தயாரிப்பில் தனியாருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதேபோல் தனியார் மதுபானக் கடைகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டன. அதுவரை பெரிய ஹோட்டல்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த மதுபானம் வீதிகளுக்கும் வந்தது.
2003ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, தனியார் மதுபான கடைகளை மூடியதுடன் அரசின் டாஸ்மாக் நிறுவனமே சில்லறை விற்பனை கடைகளை நடத்தும் என்று அறிவித்தார்.
2002-2003ஆம் ஆண்டு ரூ 3,800 கோடி வருமானத்தைக் கொடுத்த இந்த டாஸ்மாக் நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு அதிகளவு வருவாயைக் கொட்டித் தந்தது அரசுக்கு. அதாவது டாஸ்மாக் மூலமாக சராசரியாக ஆண்டுக்கு 20% கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது. 2012-13ஆம் ஆண்டில் ரூ21 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்க அடுத்த 2013-14ஆம் ஆண்டுக்கு ரூ25 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த டாஸ்மாக் வருமானம் மூலமே தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இலவச மிக்ஸி உள்ளிட்ட நலத்திட்டங்களும் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குடிநீர் உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் 5 தனியார் நிறுவனங்கள்தான் மதுபான தயாரிப்பில் ஈடுபட்டு வந்தன. தற்போது மொத்தம் 12 தனியார் நிறுவனங்கள் மதுபான தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஆட்சிகள் மாறும் போதெல்லாம் இந்த தனியார் நிறுவனங்கள் ஏற்றம் பெறுவதும் இறங்குமுகத்தை எதிர்கொள்வதும் வாடிக்கையாகிவிட்டது. 2011ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி முடியும் வரை விஜய் மல்லையாவின் யுனைட்டெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்திடம் இருந்து 20% மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் நிறுவனம் ஏற்றம் கண்டது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் 7.2% அளவுக்குத்தான் மிடாஸிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது இது 16.62% ஆக அதிகரித்துள்ளது.
அரசே மதுபானக் கடைகளை நடத்தும் என்று அறிவிக்கப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்னர் 2002ல் மிடாஸ் மதுபான தயாரிப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவால் போயஸ் தோட்டத்தை விட்டு சசிகலா வெளியேற்றப்பட்ட போது யுனைட்டெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்திடம் மீண்டும் 20% மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டதும் கவனிக்கத்தக்கது. பின்னர் சசிகலா சேர்த்துக் கொள்ளப்பட்டது போது விஜய் மல்லையாவின் யுனைட்டெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்திடம் இருந்து மதுபானம் கொள்முதல் செய்வது குறைந்து போனது. இது யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்துக்கு கடும் பின்னடைவைத் தந்தது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மதுபானங்களை அதிக அளவு அரசுக்கு கொடுத்து வந்த மோகன் பிரீவெரீஸ் நிறுவனம், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்டது. 2011-ல் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் பிரச்சனை ஏற்பட்ட போது இந்த நிறுவன கைதூக்கிவிடப்பட்டது,
2010 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கலைஞர் டிவி எம்.டியாக இருந்த சரத்குமார் டிரோபிகல் பிரிவெரீஸ் என்ற மதுபான தயாரிப்பு நிறுவனத்துக்கு உரிமம் பெற்றார். இதேபோல் தி.மு.க. ஆட்சியில் எஸ்.என்.ஜே., ஏ.எம். டிஸ்டில்லரீஸ் நிறுவனங்கள் உரிமம் பெற்றன. இதில் எஸ்.என்.ஜே. உரிமையாளர் ஜெயமுருகன், கருணாநிதி கதை வசனம் எழுதிய திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் டி.ஆர். பாலுவுக்கு சொந்தமான கோல்டன் வாட், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான எலைட் டிஸ்டல்லரீஸ் நிறுவனங்கள் ஆதாயம் அடைந்தன. இதேபோல் கேரளாவின் வயலார் ரவிக்கு சொந்தமான எம்பீ நிறுவன மதுபானங்களும் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகின்றன.
தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் இரு கட்சித் தலைவர்களுக்கும் நெருக்கமான நிறுவனங்கள் மாறி மாறி ஆதாயம் அடைந்து வருவது தொடர் கதையாக இருக்கிறது. இதேபோல் டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்படும் 'பார்'க்ளும் கூட எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்தக் கட்சியின் பிரமுகர்களுக்கே வழங்கப்படுகிறது. அவர்கள்தான் ஆதாயம் அடைகின்றனர். அங்கே விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையோ பல மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கமான நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே மதுபானங்களைக் கொள்முதல் செய்தாக வேண்டும் என்பது ஒவ்வொரு ஆட்சியிலும் நடைபெறுகிறது. இதனால் தரமான மதுபானங்கள் அல்லது பிரபலமான நிறுவன மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுவதில்லை. ஏதோ ஒரு பிராண்ட் மதுபானத்தைத் தான் திணித்துக் கொண்டிருக்கின்றனர்,.
இப்படி ஊழல் முறைகேடுகள் மதுபான நிறுவன தயாரிப்பு நிறுவனங்களில் மட்டுமே அல்ல.. டாஸ்மாக் விற்பனை கடைகளிலும் நடக்கிறது. விற்பனையாகும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் அரசு அறிவித்த விலையை விடக் கூடுதல் விலை வைத்தே டாஸ்மாக் பணியாளர்கள் விற்பனை செய்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 'டாஸ்மாக்' என்பதே ஊழல் முறைகேடுகளின் மொத்த உறைவிடமாகத்தான் இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.