தமிழை வழக்காடு மொழியாக்க போராடிய வக்கீல்களுக்கு சிறை: திருமாவளவன் ஆதங்கம்
சென்னை: தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக, திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உயர்நீதி மன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் பிற மாநிலங்களில், குறிப்பாக உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட இந்தி மொழி பேசும் மாநிலங்களில் இந்தியும் ஆங்கிலமும் வழக்காடு மொழியாக நடைமுறையில் இருந்து வருகின்றன.

அதேபோல் தமிழகத்தில் தமிழிலும் வழக்காடும் உரிமை வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளும், பிற கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. அக்கருத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவை தொடர்பாக நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த 14.9.2015 அன்றும் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் பகத்சிங் தலைமையில் பல்வேறு வழக்கறிஞர்கள் வாயில் கருப்புத் துணியைக் கட்டி அறவழியில் வலியுறுத்தினர்.
அவ்வாறு வழக்கறிஞர்கள் தமிழுக்கு ஆதரவாக அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்ததால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டனர். அதனைக் கண்டித்து 16.9.2015 அன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை பார் கவுன்சில் தலைவர் பீட்டர் ரமேஷ்குமார் அவர்கள் தலைமையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
தாய் மொழியில் வழக்காடும் உரிமையைப் பெற வேண்டுமென்பதற்காகவும், அவ்வுரிமைக்காகக் குரல் கொடுத்தவர்களை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் அறவழியில் போராடிய பீட்டர் ரமேஷ்குமார் மீது நீதிமன்றம் வழக்குத் தொடுத்தது. அவ்வழக்கின் அடிப்படையில் தற்போது அவருக்கு 6 மாதச் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தாய்மொழியில் வழக்கு நடத்தும் உரிமைக்காகப் போராடியவர்கள் மீது வழக்குப்போடுவதும், அவர்களை சிறைப்படுத்துவதும் வேறெந்த மாநிலத்திலும் நடக்காத கேலிக்கூத்தாகும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழிக்கு எதிரானவர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறப்பதாகவே இதன்மூலம் உணர முடிகிறது.
ஒரே அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ் இயங்கும் இந்திய நீதித்துறையில் மொழி உரிமையில் மாநிலத்திற்கு மாநிலம் ஒவ்வொரு நடைமுறையைக் கடைப்பிடிப்பது என்பது வருந்தத்தக்கது. இவை ஏற்புடையது அல்ல. ஆகவே, வழக்கறிஞர்கள் மீது தொடுத்துள்ள வழக்குகளை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகள் மைய அரசில் அங்கம் வகித்திருந்த போதிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளில் ஈடுபடவில்லை.
தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சியமைக்கும்போது அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications