ஜி.கே. வாசன் தனிக்கட்சி தொடங்கவேண்டும்: தமிழருவி மணியன் அழைப்பு
திருச்சி: காங்கிரஸைவிட்டு வெளியேறி ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்க தமிழருவி மணியன் அழைப்பு விடுத்துள்ளார். அவ்வாறு வாசன் தனிக்கட்சி தொடங்கும் பட்சத்தில் காந்திய மக்கள் இயக்கம் வாசனுடன் இணையத் தயார் என்றும் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
காந்திய மக்கள் இயக்க மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் திருச்சியில் நடந்தது. அந்த கூட்டத்திற்கு பின் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தலில் கோவை மேயர் பதவிக்கு எங்கள் இயக்கம் சார்பில் டாக்டர் டென்னிஸ் கோவில் பிள்ளை, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கு முத்துக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பரீட்சார்த்த முறையில் முதல் முறையாக எங்கள் இயக்கம் இத்தேர்தலில் களம் இறங்கி உள்ளது. அ.தி.மு.க.வினர் அதிகார பலம், பண பலத்தை பயன்படுத்தி வெற்றி பெற நினைக்கிறார்கள். அதையும் மீறி எங்கள் இயக்கம் பெரிய அளவில் வாக்குகளை பெறும்.

அதிமுக மீண்டும் ஆட்சி
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தி 2016க்குள் பூரண மதுவிலக்கை கொண்டு வந்தால், 2 கோடி பெண் வாக்காளர்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்கள். இதனால், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

நடைபயணம்
காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி முதல் கோவை முதல் சென்னை வரை 1,000 கி.மீ பாதயாத்திரை சென்று ஒரு நாளைக்கு ஒரு கிராமம் வீதம், 100 கிராமங்களில் மதுவிலக்கு குறித்து பிரசாரம் செய்ய இருக்கிறோம். பிரசார இறுதி நாளில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, மதுவினால் ஏற்பட்டுள்ள உயிர் பலிகள் குறித்து தெரிவிக்க உள்ளோம்.

அமைச்சரவை மாற்றம்
தமிழக அமைச்சரவை அடிக்கடி மாற்றம் செய்யப்படுவது ஜனநாயகத்தையும், தமிழக நிர்வாகத்தையும் கேலிக்கூத்தாக்கும் செயல். ஒருவரை அமைச்சரவையிலிருந்து நீக்கும்போதும், மீண்டும் சேர்க்கும்போதும் அதற்கான காரணத்தை வாக்காளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் இது முழுக்க முழுக்க எதேச்சதிகாரத்தை காட்டும் செயலாகவே அமையும்.

வாசன் வெளியேறவேண்டும்
தமிழகத்தில் இனி காங்கிரஸ் எழுந்து நிற்க எந்த வாய்ப்பும் கிடையாது. ஜி.கே.வாசன் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். 2016 ஆம் ஆண்டு தேர்தலை மனதில் கொண்டு சத்தியமூர்த்தி பவனை சோனியாவிடம் ஒப்படைத்து விட்டு ஜி.கே.வாசன் காங்கிரசில் இருந்து வெளியேற வேண்டும் என்று அவரை அன்போடு அழைக்கிறேன்.

வாசனுடன் இணையத் தயார்
காங்கிரசில் இருந்து வெளியேறி ஜி.கே.வாசன் ஒரு கட்சியை தொடங்கினால். காந்திய மக்கள் இயக்கம் அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறது.

மோடியின் 100 நாள் ஆட்சி
நரேந்திரமோடியின் 100 நாள் ஆட்சி காங்கிரஸ் பாதையிலேயே பயணிக்கிறது. ஈழப்பிரச்னை, தமிழக மீனவர் விவகாரத்தில் தீர்வு எட்டப்படாமல் இருப்பது வருத்தம் தருகிறது. தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு விடுவிக்க கூடாது என்ற சுப்பிரமணியசாமியின் கருத்து, அவருடைய சொந்த கருத்தா அல்லது பா.ஜ.க.வின் கருத்தா? என்பதை மக்களுக்கு பா.ஜ.க. தெளிவுபடுத்த வேண்டும்.

அமித்ஷாவுக்கு கண்டனம்
அதேபோல், உத்தரபிரதேசத்தில் மதக்கலவரம் தொடர்ந்தால், அங்கு பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் என அமித்ஷா பேசி இருக்கிறார். இது மிகவும் அபாயகரமான பேச்சு. கடுமையான கண்டனத்திற்குறியது.

தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணி
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்னால் உருவாக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி, 75 லட்சம் வாக்குகளை பெற்றது. தேர்தலுக்கு தேர்தல் மட்டும் முகம் காட்டும் அவர்களால் தமிழகத்தில் மாற்று அரசியலை ஏற்படுத்த முடியாது. 2016ல் இந்தகூட்டணி நீடிக்க வாய்ப்பே இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications