ரஜினி இந்த முறை ரசிகர்களை ஏமாற்றாமல் நிச்சயம் அரசியலுக்கு வருவார் : தமிழருவி மணியன்
நடிகர் ரஜினிகாந்த் இந்தமுறை நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று தமிழருவி மணியன் தெரிவித்து உள்ளார்.
சென்னை : ரஜினி இந்த முறை நிச்சயம் அரசியலுக்கு வருவார், யாரையும் ஏமாற்றமாட்டார் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்து உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வருகிற டிசம்பர் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த டிசம்பர் 12ம் தேதி தனது ரசிகர்களை சந்திக்காத நிலையில் ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் தளத்திலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்.கே நகர் தேர்தல் வருகிற 21ம் தேதி முடிவடைவதையொட்டி தனது அரசியல் அறிப்பை வெளியிடலாம் என்றும், புத்தாண்டை கருத்தில் கொண்டு அறிவிப்பு வெளியாகலாம் என்றும் பல்வேறு விதமான யூகங்கள் எழுந்து உள்ளன. இதுகுறித்து ரஜினியின் நீண்ட நாள் நண்பரும், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.
அதில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினி ஒருவரால் தான் முடியும்; மக்களும் அவரை தான் மாற்று தலைவராக எதிர்பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்டார். மேலும், ரஜினியுடனான சந்திப்பில் அவரது அரசியல் ஆர்வம் அதிகரித்து இருப்பதாகவும், கடந்த ஆண்டுகளைப்போல இந்த முறை ரசிகர்களை அவர் ஏமாற்றமாட்டார்.
விரைவில் அரசியல் மற்றும் கட்சி குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு, வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து ரஜினி களம் இறங்குவார். அரசியல் களத்தில் ரஜினி கமல் இருவரும் இணைந்தால் தமிழகத்திற்கு எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்று தமிழருவி மணியன் தெரிவித்து உள்ளார்.