திமுக, அதிமுக ஆட்சிகளில்தான் சிலை திருட்டு.. தமிழிசை குற்றச்சாட்டு
திமுக அதிமுக ஆட்சியில் பல கோயில் சிலைகள் காணாமல் போயுள்ளது அக்கட்சிகளின் தோல்வி என தமிழிசை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சியில்தான் பல கோயில் சிலைகள் காணாமல் போயுள்ளன. இதுகூட இந்த இரண்டு கட்சிகளின் தோல்விதான் என்றும் நீட் தேர்வில் தமிழில் வினாக்களை தவறாக மொழிபெயர்த்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வில் தமிழில் வினாக்களை தவறாக மொழிபெயர்த்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிலை கடத்தல் வழக்கில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்த நாங்கள் ஆதரவு தெரிவித்துவருகிறோம். பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு வழக்கில் விற்பன்னராக இருப்பதால் அவரே அந்த வழக்குகளை விசாரணை நடத்த வேண்டும் அதற்கான தடைகளைக் கைவிட வேண்டும்.
உண்மையிலேயே சிலைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு அரசாங்கம் செயல்பட வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, திருவண்ணாமலையில் காணாமல் போன சிலை 30 வருடங்களுக்கு முன்பே காணாமல் போயுள்ளதாக கூறுகிறார்கள். திமுக அதிமுக இரண்டு கட்சிகளின் ஆட்சியில் பல கோயில் சிலைகள் காணாமல் போயுள்ளன. இதுகூட இந்த கட்சிகளின் தோல்விதான். இதை கண்டுபிடிக்கும் அளவிற்காவது இப்போதுள்ள ஆட்சி முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார்.