அப்துல் கலாம் சிலை அருகில் பகவத் கீதையை வைத்ததில் தவறில்லை - தமிழிசை விளக்கம்
மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிலை அருகில் பகவத் கீதையை வைத்ததில் எந்த தவறும் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
காரைக்குடி: மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிலை அருகில் பகவத் கீதை வைத்ததில் தவறு இல்லை. அதை வைகோ அரசியலாக்க வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 27ஆம் தேதி பிரதமர் மோடி, மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு மணிமண்டபத்தைத் திறந்து வைத்தார். அந்த மணிமண்டபத்தில் அப்துல் கலாம் வீணை வாசிப்பது போல ஒரு சிலை உள்ளது. அச்சிலை அருகே பகவத் கீதை புத்தகம் உள்ளது.

அப்துல் கலாம் அருகில் எதற்கு பகவத் கீதை? திருக்குறளை விட உயர்ந்ததா பகவத் கீதை? என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் காரைக்குடியில் இரண்டு நாட்கள் நடைபெறும் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, அப்துல்கலாம் சிலை அருகே பகவத் கீதையை வைத்ததில் எந்த தவறும் இல்லை. அப்துல் கலாம் பகவத் கீதையிலிருந்து மேற்கோள் எடுத்து உரையாற்றி இருக்கிறார். ஆகையால் பகவத் கீதையை அங்கு வைத்ததில் எந்த தவறும் இல்லை. மேலும், வைகோ இதை அரசியலாக்க வேண்டாம் என கூறினார்.
அதுமட்டுமில்லாமல் நீட் தேர்வுக்கு தமிழக ஆட்சியாளர்கள் மாணவர்களைத் தயார் செய்யவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், தமிழகத்தில் பாஜக வலுவடைந்து வருவதாகவும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தன் பலத்தை நிரூபிக்கும் எனவும் தமிழிசை கூறினார்.












Click it and Unblock the Notifications