ஸ்டாலின் செயல் என்னை வருத்தமடையச் செய்தது.. தமிழிசை செளந்தரராஜன் தாக்கு
சென்னை: மு.க.ஸ்டாலின் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும். சட்டசபையில் அவரே மசோதா நகல்களைக் கிழித்து எறிந்த செயல் மிகவும் தவறானது, அதைப் பார்த்து நான் வருத்தமடைந்தேன் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.
சென்னை கொருக்குப்பேட்டையில் அன்னதான நிகழ்ச்சியை தமிழிசை தொடங்கி வைத்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் சட்டசபை நிகழ்ச்சிகள், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பல விஷயங்களை விவரித்தார்.
தமிழிசை அளித்த பேட்டியிலிருந்து...
மக்கள் எண்ணங்கள் நிறைவேறாத தொடர்
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடர் மக்களின் எண்ணங்கள் நிறைவேறாத தொடராகவே நடந்து முடிந்துள்ளது. சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை பேச எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். கிடைத்த வாய்ப்புகளை எதிர்க் கட்சிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஸ்டாலினே கிழித்து எறிந்தால் எப்படி
எதிர்க்கட்சித் தலைவர் முன்னுதாரணமான தூயவராக இருக்க வேண்டும். மசோதா நகல்களை கிழித்து வீசியது வருத்தத்துக்குரியது.
நேரடி ஒளிபரப்பு
தமிழக சட்டசபையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்தால்தான் மக்கள் தங்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியும்.
குதிரை பேரம் வரும்
உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகரசபை தலைவர், பேரூராட்சி தலைவர்களை மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்வது மக்களின் வாக்குரிமையை பறிப்பது, குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும். மிகப்பெரிய ஜனநாயக படுகொலையாகும் என்றார் தமிழிசை.