மாற்றத்தை கொண்டு வர கமல் எங்களுடன் கைகோர்த்தால் வரவேற்போம்... தமிழிசை தேர்தல் ஸ்டன்ட்!
ஆர். கே நகர் இடைத்தேர்தலில் மாற்றத்தை கொண்டு வர நடிகர் கமல் பாஜகவுடன் கைகோர்த்தல் வரவேற்போம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
காஞ்சிபுரம் : ஆர்.கே நகர் தேர்தலில் மாற்றத்தை கொண்டு வர நடிகர் கமல் பாஜகவுடன் கைகோர்த்தால் வரவேற்போம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கமல் மட்டுமல்ல யார் பாஜகவுடன் கைகோர்க்க முன்வந்தாலும் அவர்களையும் வரவேற்பதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கத்தில் பா.ஜனதா கட்சியின் ஆதிதிராவிடர் அணி சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் வழங்கிய நாளை முன்னிட்டு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.
கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பா.ஜ.க.வை மதவாத கட்சி என கூறுகிறார். சாதியவாதம் பேசும் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி பா.ஜ.க.வை மதவாதம் என்று கூறுகிறது.
ஆட்சியில் இருந்த போது
தெலுங்கானா மாநிலத்தை உதாரணம் காட்டி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தர வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறார். பல வருடங்கள் தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க. பிற்படுத்தப்பட்டோருக்காக என்ன செய்தது. ஆட்சி காலத்தில் எதையும் செய்யாமல் மத்திய, மாநில அரசு அதிகாரங்கள் குறித்து தற்போது மட்டும் ஏன் அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழிசை வரவேற்பு
சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். அந்த மாற்றத்தை கொண்டுவருவதற்கு கமல் மட்டும் அல்ல, யார் எங்களுடன் கைகோர்த்தாலும் பாரதிய ஜனதா கட்சி அதனை வரவேற்கும் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
கமல் மீது விமர்சனம்
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாக சொன்ன காலம் முதல் தொடர்ந்து அவரை விமர்சித்து வந்தார் தமிழிசை. மேலும் டுவிட்டரில் அரசியல் செய்யாமல் களத்தில் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கமலை சகட்டுமேனிக்கு விளாசித் தள்ளினார்.
தேர்தல் நிலைப்பாடு
அரசியலுக்கு வரும் இவர் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியவர் தமிழிசை. இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தலில் தங்களுடன் இணைந்தால் வரவேற்போம் என்று அவர் தேர்தல் நிலைப்பாடு எடுத்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது.