உழவர் தினம்.. ஈரோட்டில் தமிழக விவசாயிகள் சங்க மாநாடு.. கடன்களை ரத்து செய்ய கோரிக்கை
விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு: விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
உழவர் தினத்தை முன்னிட்டு தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஈரோட்டில் மாநாடு நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
வரும் ஆகஸ்ட் முதல் தேதி கீழ்பவானி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும், வனவிலங்கு தடை சட்டத்தில் இருந்து மயில், காட்டுப்பன்றியை நீக்க வேண்டும், உர விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் விவசாயிகள் கடன்களில் இருந்து விடுதலை பெற மத்திய மாநில அரசுகள் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், தேசிய நெடுஞ்சாலை, பசுமைவழிச்சாலை, உயர் அழுத்த மின் கோபுரம் போன்ற திட்டங்களுக்கு நிலம் எடுக்கும் போது 100 மடங்கு இழப்பீடும் ஆண்டுதோறும் ஈட்டுத்தொகையும் வழங்க வேண்டும், அனைத்து விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் 60 வயதுக்குமேல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.