தாமரையை கிள்ளி எறிந்த தமிழக கட்சிகள்.. தேர்தல் திருவிழாவில் தடுமாறும் பாஜக
சென்னை: தேர்தல் திருவிழாவில் திருதிருவென விழித்துக்கொண்டுள்ளது பாஜக கட்சி. மத்தியில் ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்திற்கு என்று சரியான வழிகாட்டும் ஒரு தலைவர் இல்லாமல் அக்கட்சி தத்தளித்து வருவது கண்கூடு.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில், மதிமுக, தேமுதிக, பாமக, ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இருந்தன.
திமுக, அதிமுக மாற்றாக இப்படி ஒரு கூட்டணியை அப்போது அமைத்ததே பெரிய விஷயம். இக்கூட்டணியில் கட்சிகள் இணைய, மோடி அலை மீதான எதிர்பார்ப்பும் ஒரு காரணம் என்று கூறலாம்.
உற்சாகம்
தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் தருமபுரி ஆகிய 2 லோக்சபா தொகுதிகளைதான் பாஜக கூட்டணி கைப்பற்றியது என்றபோதிலும், சுமார் 19 சதவீத வாக்குகளை பெற்றது. திமுகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை என்பது இக்கூட்டணியினருக்கு உற்சாகத்தை தந்தது.
முடியவில்லை
இதே உற்சாகத்தோடு, சட்டசபை தேர்தலில், பாஜகவால் கூட்டணி அமைக்க முடியவில்லை. பாஜகவுக்கு தனிப்பட்ட வகையில் 5 சதவீத வாக்கு வங்கி இருப்பது லோக்சபா தேர்தலின்போது தெரியவந்தது. ஆனால், தேமுதிக, பாமக என ஆளுக்கொரு முதல்வர் வேட்பாளர்களை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைப்பது சட்டசபை தேர்தலில் பாஜகவால் இயலாத காரியமாகிவிட்டது.
தேமுதிகவிடம் பேச்சு
தேமுதிகவிடம் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும், பாஜக கூட்டணியில் அவர் இணையவில்லை. வைகோ உருவாக்கி வைத்திருந்த மக்கள் நல கூட்டணியின் மீதான ஈர்ப்பு விஜயகாந்த்தை பாஜக பக்கம் வரவிடவில்லை.
குட்டி கட்சிகள்
புதிய நீதிக்கட்சியுடன் கூட்டணி பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதால் ஐ.ஜே.கே., மக்கள் கல்விக் கழகம் உள்ளிட்ட குட்டி கட்சிகளுடன்தான் பாஜகவால் கூட்டணி வைக்க முடிந்துள்ளது. மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் கூட ஒரு பெரிய கட்சியுடன் கூட கூட்டணி அமைக்க முடியாதது பாஜக தலைமைக்கு நேர்ந்த பெரும் சோதனைதான்.
சுறுசுறுப்பு இல்லை
வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு, பிரசாரம், வாக்கு சேகரிப்பு என்று தமிழக பாஜகவும் களமிறங்கியுள்ளது. ஆனால், அதில் விறுவிறுப்பு காணப்படவில்லை. சினிமா நடிகர்களை வைத்து கட்சியை வளர்க்கலாம் என்று நினைத்து விஜயகுமார், நெப்போலியன், கங்கை அமரன் போன்றோரை கட்சிக்கு அழைத்து வந்தனர்.
நடிகர்கள் அப்செட்
நடிகர்களில் யாருக்கும், போட்டியிட சீட் தரப்படவில்லை. முக பரிட்சையம் இல்லாதவர்களுக்கு தமிழர்கள் எளிதில் வாக்களிக்க மாட்டார்கள் என்பது தெரிந்தும், புதுமுகங்களுக்கு சீட்டுகளை வாரி வழங்கியுள்ளது பாஜக. இதனால் நடிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.
நெப்போலியன் நிலை
திமுகவில் இருந்து வந்து பாஜகவில் ஐக்கியமான முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாராம். கட்சியில் சேரும்போது தமிழகம் வந்த அவர், அதன் பிறகு பாஜக அலுவலகம் பக்கம் வந்ததே இல்லையாம்.
ஸ்டார் யார்
தேர்தலுக்கு பிரசாரம் செய்ய வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நெப்போலியன் வரவில்லை. ஆனால் ஆந்திராவில் நடந்த தெலுங்குபட படப்பிடிப்பில் கலந்துகொண்டுவிட்டு அப்படியே அமெரிக்கா சென்றுள்ளார். அதே போல இன்னும் சில சினிமா பிரமுகர்களும் தேர்தல் பணியில் இறங்காமல் இருக்கின்றனர்.
கோஷ்டி பூசல்
தமிழக பாஜகவில் நிலவும் கோஷ்டி பூசல் மற்றொரு பெரிய பிரச்சினையாகும். நேற்று மாலை தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டது. கமலாலயத்தில் நிகழ்ச்சி நடக்கும் என மதியம்வரை கட்சியின் மாநில தலைவர் தமிழிசை கூறிக்கொண்டிருக்க, அறிக்கை வெளியிடப்பட்டது, நாரத கான சபாவில்.
என்ன கொடுமை இது
தலைவருக்கே தெரியாமல் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் நிலை உருவாகியுள்ளதே போதும், பாஜகவில் எத்தனை கோஷ்டிகள் உருவாகிவிட்டன என்பதை அறிந்துகொள்ள என்று சுட்டிக்காட்டினார் ஒரு மூத்த பத்திரிகையாளர். இதை வைத்துதான் நாஞ்சில் சம்பத், சமீபத்தில் பேசுகையில், தமிழக பாஜக ஒரு சப்பாணி கட்சி அதனால் எழுந்திருத்து நடக்க முடியாது என்று கூறினார் போலும்.