மீனவர்களை அச்சுறுத்தும் பிரச்னைகள்... கடலையும் கார்ப்பரேட் மயமாக்குவதற்கான அச்சாணியா?
ராமேஸ்வரம் மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் தாக்குதல்களுக்கு அரசுகள் அக்கறை காட்டாமல் இருப்பதற்கு கடலையும் கார்ப்பரேட் மயமாக்குவதற்கான முயற்சியோ என்று சந்தேகிக்கின்றனர் மீனவர்கள்.
ராமேஸ்வரம்: கடல் மேல் சுறா வேட்டையாடும் கடல் ராசாக்களாக இருந்த மீனவர்களுக்கு கடலுக்கு செல்வதென்றாலே அச்சத்தை ஏற்படுத்தும் நிலை அதிகரித்து வருகிறது. அசாதாரண சூழ்நிலைகளில் அரசுகள் மீனவர்களை காப்பாறாமல் போவது, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு விடலாம் என்று இழுத்துக் கொண்டே போகும் இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்கள் இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்படுவது எப்போது?
இந்தியாவில் எந்த மாநிலத்தைச்சேர்ந்த மீனவர்கள் அதிக பிரச்னைகளை சந்திக்கிறார்கள்? சந்தேகமே வேண்டாம்.. தமிழ்நாட்டு மீனவர்கள்தான்.. ஒரு பக்கம் இலங்கை கடற்படை, இன்னோரு பக்கம் இந்திய கடலோர பாதுகாப்பு படை. இந்த இரு படைகளிடம் சிக்காமல் மீன் பிடித்து திரும்புவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
தடைசெய்யப்பட்ட முறைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால், தமிழக கடலில் மீன்வளம் குன்றியுள்ளது. எல்லைதாண்டாமல் மீன் பிடித்தால் லாபம் இருக்காது என்பதே நிதர்சனம் என்கிறார்கள் விசைப்படகு உரிமையாளர்கள். ஆனால், எல்லை தாண்டினால், பாதுகாப்பு படைகளின் தாக்குதல் அல்லது கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் பெருகும். அதற்கு மத்தியில்தான் மீன் பிடிக்கவேண்டும்.
தொடர் தாக்குதலுக்கு ஆளாகும் மீனவர்கள்
எல்லைப்பகுதியில் மீன் பிடித்தால் கூட இலங்கை கடற்படை கைது செய்கிறது, அல்லது விரட்டியடிக்கிறது. கடற்படை அதிகாரிகளின் மனநிலையைப் பொறுத்து கைதா? தாக்குதலா என்பது முடிவாகும் என்கிறார்கள் மீனவர்கள். பல நேரங்களில், மீன்களை கடலில் கொட்டிவிட்டு, படகை தாக்குவது, மீனவர்களை தாக்குவது என தொடர் சம்பவங்கள் நடந்துவருகிறது.
மோசமான நிலையில் மீனவர்கள் வாழ்க்கை
அண்மையில் இந்திய கடலோர பாதுகாப்பு படை தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் இன்னும் நிலைமையை மோசமாக்கியுள்ளது. சுட்டது உண்மை, ஆனால், கைப்பற்றப்பட்டது இந்திய கடலோர பாதுகாப்பு படையில் குண்டு அல்ல என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சங்கத்துக்குறைவில்லை
குறைந்த வளத்தில் யார் அதிக அளவு மீன் பிடிப்பது என்ற தொழில்போட்டியால், நாளுக்குநாள் உள்ளூரிலும் மோதல் நடந்துவருகிறது. சங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் எந்த பிரச்னைக்கும் தீர்வு கிடைத்ததாக தெரியவில்லை.
உதவி இல்லையே?
ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கை கொடுக்கவில்லை. கடலில் சிக்கிய மீனவர்களை காப்பாற்றவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஏன் மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை இப்படி வஞ்சிக்கிறது?
கார்ப்பரேட் மயத்திற்கான அடித்தளமா?
அதிர்ச்சிமேல் அதிர்ச்சி என்னவென்றால், அரசுகளின் அமைதிக்குப்பின்னால், மீன் பிடிதொழிலை தனியார் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் முயற்சி இருப்பதாக மீனவ சங்கத்தினர் கூறியுள்ளனர். ஏற்கனவே ஆழ்கடல் மீன்பிடிப்பு தனியார் வசம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் மீனவர்கள். இதனால் ஆழ்கடல் மீன்பிடிப்பு சாத்தியமில்லாமல் இருக்கும் சூழலில் அரசுகளின் தொடர் மவுனங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேலும் அழிக்கும் செயலாக இருக்குமோ என்று அச்சம் தெரிவிக்கின்றனர். அதாவது கொஞ்சம் கொஞ்சமாக இதிலும் கார்ப்பரேட் மயத்தை புகுத்தி கார்ப்பரேட் முதலாளிகளிடம் மீனவர்களை தொழிலாளர்களாக மாற்றும் அரசின் முயற்சியோ இது என்றும் மீனவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.