“அப்டேட்” ஆகும் ரேஷன் கடைகள்! இனி கூகுள் பே, போன்பேவில் பணம் செலுத்தலாம்! தமிழ்நாடு எங்கும் அமல்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மே மாத கூகுள் பே, போன் பே, பேடி எம் போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்தும் முறையை அமல்படுத்த கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு, கூட்டுறவுத் துறை பதிவாளர் சங்கர் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, "தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள 683 நியாய விலைக்கடைகளிலும் விரைவு எதிர்வினை (QR Code) குறியீடு மூலம் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள எதுவாக கோயம்புத்தூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, மதுரை, சென்னை, வேலூர். இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய 12 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UP) வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதர மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் இன்னும் ஒருவாரத்தில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) வசதி ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, அனைத்து மண்டலங்களிலும் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் Paytm, Google Pay, Phone Pe போன்ற UPI வசதிகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இது குறித்து நியாயவிலைக் கடைகளை நடத்தும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி மண்டலங்களில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் 31.05.2023 - க்குள் Paytm, Google Pay, Phone Pe போன்ற UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்து நிறைவறிக்கையினை இல்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் இது குறித்து தினசரி முன்னேற்ற அறிக்கையினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டே தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி கொண்டு வரப்படும் என தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்து இருந்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் வெளியிட்ட அறிக்கையில், "கூகுள் பே, பேடி எம் போன்ற யுபிஐ வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படும். பிறகு படிப்படியாக அனைத்துக் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்." என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமலுக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications