எஸ்.சி.,எஸ்.டி., சட்ட திருத்தம் : உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு
எஸ்.சி.,எஸ்.டி., சட்ட திருத்தம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை : தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி வன்கொடுமை தடுப்புச் சட்ட திருத்தங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த வழக்கில் கடந்த மார்ச் 20ம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அதில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது.
இதனைக் கண்டித்து வடமாநிலங்களில் தலித் அமைப்புகள் நடத்திய கலவரத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தமிழகத்திலும் இதனைக் கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், வன்கொடுமை தடுப்பு சட்ட தளர்வு தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதனையடுத்து இன்று வடமாநிலங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு, தலித் மக்கள் படுகொலை உள்ளிட்ட அரசு வன்கொடுமைகளைக் கண்டிக்கும் வகையிலும், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை அரசியல் அமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்க வற்புறுத்தியும் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன.
இந்நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்ட்டத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்ட திருத்தம் குறித்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.