என்னய்யா கொடுமை இது... பொங்கல் பரிசில் வெல்லத்திற்கு பதில் சர்க்கரை!
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசில் வெல்லத்திற்கு பதில் சர்க்கரை வழங்கப்படுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : ரேஷன் கடைகளில் தமிழக பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொங்கல் பரிசில் வெல்லத்திற்கு பதில் சர்க்கரை வழங்கப்படுவதைக் கண்டு மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதோடு பொங்கல் பரிசில் வெல்லம் வழங்கப்படும் என்று வெல்லம் தயாரித்து வைத்துள்ள விவசாயிகளும் அரசு கொள்முதல் செய்யாததால் கவலையடைந்துள்ளனர்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை தலா, 20 கிராம், ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசித் தொகுப்பு வழங்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பொங்கல் பரிசை வாங்கிச் செல்ல மக்கள் கூட்டம் ரேஷன் கடைகளில் அலைமோதுகின்றன.
இந்நிலையில் வரிசையில் காத்திருந்து பொங்கல் பரிசு வாங்கிச் செல்லும் மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் பொங்கல் பரிசில் பச்சரிசி, முந்திரி, திராட்சை,ஏலக்காய் கொடுப்பது எல்லாம் சரி, வெல்லம் கொடுக்காமல் சர்க்கரை கொடுத்தால் எப்படி பொங்கல் பொங்குவது என்பது தான் மக்களின் கேள்வி. சர்க்கரையை வைத்தா பொங்கல் செய்ய முடியும் இது தான் தமிழக மக்களுக்கு அரசு கொடுக்கும் பரிசா என்று கேலி செய்கின்றனர்.

வெல்லத்திற்கு பதில் ஏன் சர்க்கரை?
பொங்கல் பரிசில் ஏன் வெல்லத்திற்கு பதில் சர்க்கரை போடப்படுகிறது என்று விசாரித்த போது கிடைத்த தகவல் அதைவிட படு சூப்பர். ரேஷன் கடைகளுக்கு வெல்லம் மூட்டையாக மட்டுமே அனுப்பப்படுவது தான் வழக்கமாம். அதனை பாக்கெட்டுகளில் அடைத்து மக்களுக்கு வழங்க வேண்டியது ரேஷன் கடைகாரர்களின் பொறுப்பாம்.

பணிச்சுமை காரணமாக
வெல்லத்தை பாக்கெட் போட தனியாக பணியாளர்களை வைத்துக் கொள்ளவும் அரசு பணம் கொடுப்பதில்லை, ரேஷன் கடைகாரர்கள் தங்களது சொந்த செலவில் தான் இவற்றை செய்ய வேண்டிய நிலை இருந்ததால் பணிச்சுமையை குறைக்கும் விதமாக வெல்லத்திற்கு பதில் சர்க்கரை தந்தால் மாதாமாதம் சர்க்கரை விநியோகம் செய்வது போல சிரமமின்றி போய்விடும் என்பதால் தான் இந்த ஏற்பாடாம்.

தஞ்சாவூர் விவசாயிகள் ஏமாற்றம்
ஆனால் வெல்லத்தை பாக்கெட் போட்டு கொடுப்பதற்கு கணக்கு பார்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளது அரசு என்பது தான் உண்மை. வழக்கமாக தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை, மாகாளிபுரம், தேவன்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பொங்கல் பரிசு வழங்குவதற்காக அரசு வெல்லத்தை கொள்முதல் செய்யும்.

விவசாயிகளுக்கு கசப்பாகிப் போன பொங்கல் பரிசு
இந்த ஆண்டும் இதே போன்று அரசு வெல்லம் கொள்முதல் செய்யும் என எண்ணி விவசாயிகள் கரும்புகளை ஆலைகளுக்கு அனுப்பாமல் வெல்லம் தயாரித்து வைத்துள்ளனர். ஆனால் பொங்கல் பரிசில் வெல்லத்திற்கு பதில் சர்க்கரை வழங்கப்பட்டு வருவதால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்காக கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவிலேயே விவசாயிகளின் கவலையை தீர்க்காமல் அரசு இப்படி ஒரு முடிவை எடுத்தது விவசாயிகளுக்கு வேதனையை தந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications