சொத்து குவிப்பு வழக்கிற்காக ஓபிஎஸ் பதவி விலக வேண்டுமா.. நிருபர் கேள்விக்கு கமல்ஹாசன் பதில் இதுதான்!
Recommended Video
சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதவி விலக வேண்டும் என்று தமிழகம் வழிமொழிவதில் எனக்கு சந்தோஷம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் இன்று மாலை 4.45 மணியளவில் நிருபர்களை சந்தித்தார்.
நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க செல்லும் முன்பாக கமல்ஹாசன், செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதுகுறித்த தொகுப்பு இதோ:
காவிரி ஆணையம்
காவிரியில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதையும் நாங்கள் தமிழக பங்கு தண்ணீராக கணக்கில் வைப்போம் என கர்நாடக அரசு கூறியுள்ளதே. இது குறித்து உங்கள் பார்வை? என்ற நிருபரின் கேள்விக்கு, நான் கர்நாடகா போனது, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பிச்சை கேட்கதான். விவசாயிகளுக்கு தேவை இருந்தது. அதற்காக வெட்கம் பார்க்காமல் போனேன். இதை, நான் காவிரி ஆணையமே தேவை இல்லை என்று கூறியதாக அரசியலில் திரித்துவிட்டனர். காவிரி ஆணையம் தேவை. வறட்சி காலங்களில் நீர் இருப்பை பங்கீட நீர் ஆணையம் அவசியம்.
ஓ.பன்னீர் செல்வம் பதவி விலக கோரிக்கை
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் எழுந்துள்ளதே என்ற நிருபர்களின் கேள்விக்கு, இதை தமிழகம் வழிமொழிவது சந்தோஷம். இதை நான் சொல்லி ஒரு வருஷம் ஆகிவிட்டது. பல ட்வீட்டுகள் போட்டதும் இதற்குதான். இதுபோன்ற நிலவரம் கூடி வருவதுதான் நான் அரசியலுக்கு வர முக்கிய காரணம் என்றார் கமல்ஹாசன்.
எம்ஜியாருக்கே தனியார் விமானம்தான்
ஓபிஎஸ் பதவி விலக வேண்டுமா என்ற நிருபரின் கேள்விக்கு, இந்த அரசு பதவி விலக வேண்டும் என்று நான் கூறி பல வருடங்கள் ஆகிவிட்டது என்றார் கமல். ஓபிஎஸ் தம்பிக்கு ராணுவ ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது பற்றிய கேள்விக்கு, "அரசியல் மாண்பு சீரழிந்து வருவதாக நினைக்கிறேன். எம்ஜிஆர் உயிருக்காக போராடிக்கொண்டிருந்தபோது தனியார் விமானத்தில்தான் போனார்" என்றார் கமல்ஹாசன்.
என்ன குரல் அது?
கமல்ஹாசன் 8 வழிசாலை பற்றி பேச கூடாது, நடிப்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று, எச்.ராஜா கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, 8 வழிச்சாலை பற்றி எந்த ஏழையும் பேசலாம். எங்களுக்கு வேண்டுமா வேண்டாமா என்பதை மக்களே முடிவு செய்வர். பேசக்கூடாது என எப்படி சொல்லலாம். என்ன குரல் அது? என்று கோபம் வெளிப்படுத்தினார் கமல்.
லோக்ஆயுக்தா சட்டம்
சமூக வலைத்தளங்களி்ல கருத்து கூறுவோர் கைது செய்யப்படுகிறார்களே என்ற கேள்விக்கு, "கண்டிப்பாக கருத்து சுதந்திரம் படிப்படியாக பறிக்கப்படுகிறது. கருத்துகள் வெளிப்பட கூடாது என்ற பதற்றம் அவர்களுக்கு உள்ளது. இது மாற வேண்டியது இந்தியாவின் தேவை" என்ற கமல், "லோக்ஆயுக்தா சட்டம் என்பது தமிழக அரசின் மற்றொரு கண்துடைப்பு. லோக்ஆயுக்தாவின் நோக்கத்திற்கே அவமரியாதை. வேஸ்ட்" என்றார்.