எய்ட்ஸ் நோயாளிகளை அரவணைப்போம்! அன்பு செலுத்துவோம்: ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: எய்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிடப் பாடுபடுவோம் என்கிற உறுதிமொழியினை உலக எய்ட்ஸ் தினமான இன்று அனைவரும் ஏற்று, அதன்படி செயலாற்றிட வேண்டுமென்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நாளை உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப் படுகிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
‘ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் இல்லாத சமூகத்தை உருவாக்கும் வகையில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே உலக எய்ட்ஸ் தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் பல்வேறு கிராமிய கலைகள் மூலமாகவும், வளரிளம் பருவ பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் கல்வி மூலமாகவும் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 2458 செஞ்சுருள் சங்கங்கள் மூலமாகவும் எய்ட்ஸ் நோய் பற்றிய உண்மை விவரங்களை, அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எச்.ஐ.வி. நோயை கண்டறிய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நம்பிக்கை மையங்கள், பொது கூட்டாண்மை மையங்கள், பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்கள் நிறுவப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கும் வகையில் 52 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள், 149 இணைக் கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் மற்றும் 16 சட்ட உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று வர கட்டணமில்லா பேருந்து பயண அட்டை; எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் மாத ஓய்வூதியம்; முதியவர்களுக்கும், இளம் விதவைகளுக்கும் வயது வரம்பை தளர்த்தி ஓய்வூதியம்; எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் முன்னுரிமை போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எச்.ஐ.வி / எய்ட்ஸ் உள்ளோரை அரவணைப்போம்! அன்பு செலுத்துவோம்! மனித நேயம் வளர்ப்போம்! எய்ட்ஸ் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிடப் பாடுபடுவோம்! என்கிற உறுதிமொழியினை உலக எய்ட்ஸ் தினமான இன்று அனைவரும் ஏற்று, அதன்படி செயலாற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.