திராவிட இயக்கத்தால்தான் பல துறைகளில் தமிழகம் முன்னிலை: புள்ளி விவரங்களோடு விளாசிய ஓபிஎஸ்
சென்னை: திராவிட இயக்கங்களை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் தமிழகம் திராவிட இயக்கங்களால்தான் வளர்ச்சியடைந்தது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றிய ஓ.பன்னீர்செல்வம் உரையின் இறுதியில், திராவிட இயக்கங்கள் குறித்து கருத்தை பதிவு செய்தார்.
திராவிட இயக்கம் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், சிலர் குறுகிய நோக்கில் திராவிட இயக்கங்கள் மீது விமர்சனம் செய்கிறார்கள்.
திராவிட இயக்கங்களை அழிக்க நினைக்கிறார்கள்.
ஆனால், திராவிட இயக்கத்தால்தான், சமூக, பொருளாதார கூறுகளில் தமிழகம் மாற்றம், வளர்ச்சி கண்டுள்ளது. அடிப்படை வசதி, பொது சுகாதாரம், சமூக பாதுகாப்பு, தொழில், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் தமிழகம் கண்ட முன்னேற்றத்தை மனசாட்சி உள்ள யாராலும் மறுக்க முடியாது.
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதார குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
1973-74ம் ஆண்டில் வறுமைகோட்டுக்கு உள்ளோர் எண்ணிக்கையில், தமிழகத்தில் 54.94 சதவீதம் பேர் இருந்தனர். 2011-12ல் தேசிய அளவில் இந்த குறியீடு 21 சதவீதம் என்ற அளவில் இருந்தது. ஆனால், தமிழகத்தில் இது 11.28 சதவீதம்தான். இவ்வாறு புள்ளி விவர ஆதாரங்களோடு பன்னீர்செல்வம் பட்ஜெட்டை நிறைவு செய்தார்.
டிடிவி தினகரன் இன்று புதிதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ளார். அந்த கட்சியின் பெயரில் திராவிடம் என்ற சொல் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், பன்னீர்செல்வம் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.