ஜெயிலில் ஜெ... அமைச்சர்கள் கையில் அதிகாரம் - கோப்புகள் தேக்கத்திற்கு விடிவு?
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றுள்ள நிலையில், இனிமேலாவது தங்கள் துறை சம்பந்தப்பட்ட முடிவுகளை சம்பந்தப்பட அமைச்சர்கள் சுயமாக எடுப்பார்களா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
இதுவரை தமிழக முதல்வராக இருந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தலைமையில் தான் அனைத்து அமைச்சர்களும் செயல்பட்டனர் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.
தங்கள் துறை சம்பந்தப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் அனைத்தையும் முதல்வரின் பார்வைக்கு கொண்டு வந்த பின்னரே அமைச்சர்களால் செயல் படுத்த முடிந்தது. இதனால் கோப்புகள் தேங்கும் நிலை உண்டானது. பல நல்ல திட்டங்கள் தள்ளிப் போயின.
நால்வர் அணி...
அதன் பிறகு, சீனியர் அமைச்சர்கள் நால்வரை தேர்வு செய்தார் ஜெயலலிதா. இந்த நால்வரை தவிர்த்து மீதமுள்ள அமைச்சர்களை நான்காக பிரித்து நால்வர் அணியில் உள்ள ஒவ்வொருவரிடமும் ஒப்படைத்தார்.
வழிகாட்டல்...
ஜூனியர் அமைச்சர்களின் இலாகா பணிகளை கண்காணிக்கும் பொறுப்பை அவர்கள் செய்யத் துவங்கினர்.'நால்வர் அணி' என்றழைக்கப்பட்ட சீனியர் அமைச்சர்களிடம் கேட்காமல், எந்த முடிவும், ஜூனியர் அமைச்சர்களால் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. துறை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமும், அறிவுரையும் அவர்கள் கூறி வந்தனர்.
புதிய முதல்வர்...
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து பெங்களூர் சிறையில் உள்ளார் ஜெயலலிதா. இதனால், ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதல்வராக இன்று பதவியேற்கிறார்.
சரியான சந்தர்ப்பம்...
எனவே, இனி ஓ.பி.எஸ்., தலைமையிலான ஆட்சியில் இதே நிலையை அமைச்சர்கள் தொடர முடியுமா என்பது சந்தேகமே.எனவே, இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தங்களது துறை சம்பந்தப்பட்ட கோப்புகளை அவர்களே கையாள வேண்டும் என அதிகாரிகள் விரும்புகிறார்கள்.
காலதாமதம் தவிர்ப்பு...
இதனால், தேவையில்லாத காலதாமதம் தவிர்க்கப்படுவது மட்டுமின்றி மக்களும் விரைந்து திட்டங்களால் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. என்ன நடக்கிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.