கருணை அடிப்படையில் வெளியே வரும் கைதிகள் மீண்டும் தவறிழைத்தால் நாங்கள் பொறுப்பு... தமிமுன் அன்சாரி
கருணை அடிப்படையில் வெளியே வரும் கைதிகள் தவறிழைக்க மாட்டார்கள். அதற்கு நாங்கள் பொறுப்பு என்று தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
சென்னை: கருணை அடிப்படையில் வெளியே வரும் கைதிகள் மீண்டும் தவறிழைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம் என்றும் முதல்வரை சந்தித்தது நன்றி தெரிவிக்கவே தவிர அதில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் தெரிவித்தார்.
10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்கள் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்படுவர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதை எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
முதல்வருக்கு நன்றி தெரிவிக்க அவரது இல்லத்துக்கு வருகை தந்த இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கவே அவரை சந்தித்தோம். இதில் அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல. யார் யாரை எல்லாம் இந்த விடுதலை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளோம்.
நக்ஸல்களின் பெயரால், மாவோயிஸ்ட்களின் பெயரால், ராஜீவ் படுகொலையின் பெயரால், முஸ்லிம்களின் பெயரால் யாரெல்லாம் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்களோ அவர்களின் நோய் தன்மை, வயது, இயலாமை, 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பது உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என்று தெளிவாக வலியுறுத்தி உள்ளோம்.
இந்த விடுதலை குறித்து நாங்கள் மூவரும் சட்டமன்றத்தில் தொடர்ந்து பேசி வந்தோம் என்றார். அப்போது 10 ஆண்டுகளுக்கு மேல் குண்டுவெடிப்பில் சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் மீண்டும் குண்டு வைத்தால் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு தமிமுன் கோபமடைந்தார். பின்னர் அவர் கூறுகையில் அந்த கைதிகளின் குடும்பத்தினர் படும் துன்பத்தை கருத்தில் கொண்டு நீங்கள் இதுபோன்ற கேள்விகளை கேட்டு அவர்களின் விடுதலை அறிவிப்பில் மண் அள்ளி போட்டுவிடாதீர்கள்.
சிறையிலிருந்து கருணை அடிப்படையில் வெளியே வந்த பல்வேறு நக்ஸல் மற்றும் மாவோயிஸ்டு தலைவர்கள் இப்போது குண்டு வைத்து வருகிறார்களா. அவர்கள் ஏற்கெனவே மன ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் திருந்தி வாழும் வாய்ப்புகளை இந்த சமூகம் தர வேண்டும் என்று தெரிவித்தனர்.