ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: கட்சி ஒன்றுதான்.. கருத்துகள் வெவ்வேறு.. "தாமரை"யில் விரிசலா?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்ட கருத்துகளில் முரண்பாடு காணப்படுகிறது.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை ஒத்தி வைப்பது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜனும், பொன்.ராதாகிருஷ்ணனும் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே.நகருக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுகவின் இரு அணிகளும், திமுக, தேமுதிக, தீபா பேரவை உள்ளிட்ட கட்சிகள் களம் கண்டுள்ளன.
இந்த தேர்தலில் எப்படியாயினும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்
இந்நிலையில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க லட்சக்கணக்கிலான பணத்தை களம் இறக்கியுள்ளனர். அவ்வப்போது அதிகாரிகள் அதைப் பறிமுதல் செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு மளிகை பில் செலுத்துவது, பரிசுப் பொருள்களை வழங்குவது போன்ற நூதன முறையில் பணத்தை விநியோகிப்பதாக புகார் எழுந்துள்ளது.
அதிகாரிகள் மாற்றம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருப்பதாக குற்றம்சாட்டு எழுந்ததால் தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மஜா தேவி, சென்னை காவல் துறை ஆணையர் ஜார்ஜ், காவல் துறை உயர் அதிகாரிகள் என அவ்வப்போது தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றம் செய்தது. இருந்தும் நாளுக்கு நாள் பணப்பட்டுவாடா பிரச்சினை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தேர்தல் நிறுத்த வேண்டும்
இந்நிலையில் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா அதிகரித்து வருவதால் தேர்தல் முறையாக நடைபெறாது என்பதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கவுள்ளதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். மேலும் பணத்தால் வாக்காளர்களை விலைக்கு வாங்கி நடத்தும் தேர்தலை நடத்தாமல் இருப்பதே மேல். எனவே அதிகாரிகளை மாற்றுவதில் பயன் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முரண்பாடு
அதேசமயம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேறு மாதிரி பேசியுள்ளார். அதிமுகவின் இரண்டு அணிகளும், திமுகவும் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தால் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுகின்றன. அதேசமயம், தேர்தலை ரத்து செய்தால் ஜனநாயகம் கேலி கூத்தாகிவிடும். எனவே திட்டமிட்டபடி தேர்தல் நடைபெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உள்ளுக்குள் சண்டையா
இப்படி ஒரே கட்சியினரிடம் இருந்து வெவ்வேறு கருத்துகள் வந்துள்ளதால், தமிழக பாஜகவில் கோஷ்டிப் பூசல் அதிகமாகி விட்டதா, ஒற்றுமை சீர்குலைந்து விட்டதா, பாஜகவினர் விரக்தியில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகின்றார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.