சீட் பெல்ட் அணியாமல் 'பைக்' ஓட்டியதற்கு அபராதம்.. தஞ்சை போலீசின் அதீத கடமை உணர்ச்சி
சீட் பெல்ட் அணியாமல் பைக் ஓட்டியதற்கு அபராதம் விதித்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
தஞ்சை: வாகன தணிக்கையின்போது சீட் பெல்ட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதற்காக அபராதம் விதித்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி புகார் அளித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் முழுவதும் போலீஸார் அடிக்கடி வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த வாகன சோதனையின்போது ஹெல்மெட் அணியாமல், குடிபோதையில், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இருசக்கர வாகனம் ஓட்டிய ஒருவருக்கு சீட் பெல்ட் அணியாமல் வந்ததாக கூறி போலீஸார் அபராதம் விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை விவசாயி
தஞ்சையை அடுத்த வேங்குராயன்குடிக்காட்டை சேர்ந்தவர் பாண்டியராஜ் (29). கூலி வேலை செய்யும் விவசாயி. தஞ்சை மாரியம்மன்கோவில் புறவழிச்சாலை அருகே அமைந்துள்ள கூட்டுறவு வங்கிக்கு பணம் செலுத்துவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்தப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த தஞ்சை போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

வாகனத்தை நிறுத்தினர்
அப்போது பாண்டியராஜனின் வாகனத்தை நிறுத்தினர். அவரிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தன. ஹெல்மெட்டும் வைத்திருந்தார். ஆனால் போலீஸாரோ சீட் பெல்ட் அணியவில்லை என்று கூறி அபராதம் செலுத்த கூறினார். அதிலும் நீதிமன்றத்துக்கு சென்றால் ரூ.2500 என்றும் இங்கே செலுத்தினால் ரூ. 500 மட்டும் கொடுக்க வேண்டும் என்று போலீஸார் கூறியதாக தெரிகிறது.

ரசீது தரவில்லை
போலீஸார் வண்டி சாவியை எடுத்துக் கொண்டதால் வேறு வழியில்லாமல் அவர் ரூ.500 செலுத்தி வண்டியை எடுத்து வந்தார். இந்நிலையில் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேலிடம் மனு கொடுத்தார்.

நடவடிக்கை எடுங்கள்
அந்த மனுவில் நடந்த சம்பவங்களை கூறிய பாண்டியராஜன், தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து போலீஸார் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு பரிந்துரை செய்தார்.












Click it and Unblock the Notifications