குடித்துக் குதூகலித்துக் கலக்கிய "குடி"மக்கள்.. தீபாவளி மதுவிற்பனை ரூ. 358 கோடி
தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்களில் 358 கோடி மதுவிற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் அறிவித்துள்ளது.
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3 நாட்களில் மட்டும் 358 கோடிக்கு மது வகைகளை வாங்கி டாஸ்மாக் நிறுவனத்திற்கு 358 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித் தந்திருக்கிறார்கள் தமிழக குடி மக்கள்.
தமிழகம் முழுவதும் 6,200 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வழக்கமான நாட்களில் சராசரியாக 55 கோடி முதல் 65 கோடி ரூபாய் வரை மதுபான வகைகள் விற்பனையாகும். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இது 90 கோடி முதல் 100 கோடி ரூபாய் வரை இருக்கும்.
தீபாவளி, புத்தாண்டு போன்ற முக்கியமான பண்டிகை மற்றும் கொண்டாட்ட நாட்களில் மது பிரியர்களை மதுபான வகைகளை வாங்கி கொண்டாடி மகிழ்ந்து வருவது வாடிக்கையாகிவிட்டது. இது போல இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி மதுப்பிரியர்கள் அதிக அளவில் மதுவகைகளை வாங்கி சென்றுள்ளனர்.
தீபாவளிக்கு முதல் நாளே களைகட்டிய டாஸ்மாக் கடைகள்
தீபாவளிக்கு முந்தைய நாளான 28-ந் தேதியே குடிமக்களின் கூட்டம் அதிகமாக டாஸ்மாக் கடைகளில் காணப்பட்டது. 12 மணிக்கு திறக்கப்படும் கடைகளின் முன் 10 மணியில் இருந்தே கூட்டம் கூட தொடங்கியது. மாலை 6 மணிக்கு மேல் கட்டுக்கடங்கா கூட்டம் அலை மோதியது. பெரிய பைகளிலும், கைகளிலும் பீர் உள்ளிட்ட பல வகை மதுபானங்களை வாங்கிச் சென்றனர். 28ம் தேதி மட்டும் 108 கோடி ரூபாய்க்கு மதுவகைகள் விற்றுத தீர்ந்தன.
தீபாவளி சேல் 135 கோடி
முதல் நாள் விற்பனை ஆனதைவிட கூடுதலாக தீபாவளி அன்று மது விற்பனை நடைபெற்றது. அன்று மட்டும் 135 கோடிக்கு மது பானங்களை வாங்கிச் சென்று தீபாவளியை கொண்டாடித் மகிழ்ந்துள்ளனர் மதுப் பிரியர்கள்.
அடுத்த நாளும் தள்ளாடாமல் 115 கோடி விற்பனை
தீபாவளிக்கு மறுநாள் ஞாயிற்றுக் கிழமையும் சேர்ந்து வந்தததால் அன்றும் 115 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. ஆக, இந்த 3 நாட்களையும் சேர்த்து 358 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகி உள்ளது.
நெல்லை, தூத்துக்குடியில் 14 கோடி மதுவிற்பனை
இதே போன்று நெல்லை மாவட்டத்தில் அதிக அளவில் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான 28ம் தேதி நெல்லை மாவட்டத்தில் ரூ.5 கோடிக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 2.52 கோடிக்கும் மது பானங்கள் விற்றுள்ளன. அது போல் தீபாவளி பண்டிகையன்று நெல்லை மாவட்டத்தில் ரூ. 3 கோடிக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 3.50 கோடிக்கும் என மொத்தம் 2 நாட்களும் சேர்ந்து ரூ.14 கோடிக்கு மதுபானங்கள் விற்று தீர்ந்துள்ளன.
20 சதவீதம் கூடுதலாக மதுவிற்பனை
இந்த இரண்டு நாட்களும் சேர்த்து தூத்துக்குடியில் மொத்தம் 12 ஆயிரத்து 400 பெட்டிகளும், நெல்லை மாவட்டத்தில் 16 ஆயிரம் பெட்டிகளும் விற்கப்பட்டுள்ளன. இந்த விற்பனை கடந்த ஆண்டை விட 20 சதவீதம் கூடுதலாகும் என டாஸ்மாக் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
தேவர் ஜெயந்தியால் மதுக்கடைகள் அடைப்பு
தேவர் ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் அக்டோபர் 27ம் தேதி முதல் 4 நாட்களும், மதுரையில் அக்டோபர் 28ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு இல்லை என்றால் மதுவிற்பனை இன்னும் கூடுதலாக இருந்திருக்கும் என்று கருதப்படுகிறது.
மௌசு குறையாத பீர்
தமிழகம் முழுவதும, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 33 கோடி ரூபாய் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. வழக்கம்போல் பிராந்தி மற்றும் விஸ்கி மதுவகைகள் அதிகம் விற்று தீர்ந்தது. என்றாலும் பீருக்கு என்று தனி மௌசு உள்ளது. கடந்த ஆண்டை விட பீர் விற்பனை இந்த ஆண்டு 10 சதவீதம் கூடுதலாக இருந்தது.
ஆக, மொத்தம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 33 கோடி ரூபாய் கூடுதலாக விற்று டாஸ்மாக் சாதனை படைத்துள்ளது.