வரி விதிப்பு பாரபட்சம்.. புலம்பும் சென்னையில் இணைந்த புறநகர் பகுதிவாசிகள்!
சென்னை: சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளுக்கான வீட்டு வரி, வணிக வரி சென்னை நகரில் வசூலிக்கப்படுவதைவிட கூடுதலாகவே தொடர்கிறது என்று புகார் எழுந்துள்ளது.
2011 ம் ஆண்டு சென்னை மாநகராட்சியோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் 25 கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டன. இதனால் சென்னை நகரின் பரப்பளவு அதிகரித்தது.
2008-ம் ஆண்டு வீட்டு வரி, வணிக வரி உயர்வு
இதற்கு முன்பு 2008ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி தவிர இதர நகராட்சிகளில் வீட்டு வரி, வணிக வரி உயர்த்தப்பட்டது.
இணைந்த பின்பும் பழைய வரி
தற்போது சென்னை மாநகராட்சியில் இந்த நகராட்சிக்குரிய பகுதிகள் இணைந்து விட்டன. ஆனாலும் சென்னை மாநகராட்சியில் வசூலிக்கப்படும் வீட்டு வரி வசூலிக்கப்படாமல் முந்தைய நகராட்சிக் காலத்து வரியே வசூலிக்கப்படுகிறது.
இரு மடங்கு வணிக வரி
சென்னை அண்ணா சாலை, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் வணிக வளாகங்களுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.6.40 பைசா வசூலிக்கப்படுகிறது.
அம்பத்தூரில் எவ்வளவு?
ஆனால் புறநகரான ஆலந்தூர், அம்பத்தூர் கடைகளுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.12.15, ரூ. 9 என வரியாக இரு மடங்கு வசூலிக்கப்படுகிறது.
ஆலந்தூரில் 2 மடங்கு வீட்டு வரி
ஆலந்தூர், அம்பத்தூர், திருவொற்றியூர் ஆகிய புறநகர் பகுதிகளில் வீட்டு வரி ஆலந்தூரில் ஒரு சதுர அடிக்கு ரூ.1.50 முதல் ரூ.6.15 வரையும் அம்பத்தூரில் ஒரு சதுர அடிக்கு ரூ.1.70 முதல் ரூ.3.38 வரையும் திருவொற்றியூரில் ஒரு சதுர அடிக்கு ரூ.4 ரூபாய் எனவும் வசூலிக்கப்படுகிறது.
போயஸ், கோபாலபுரத்தில் ரொம்ப குறைவு
ஆனால் போயஸ் கார்டன், கோபாலபுரம், பெசன்ட் நகர், அடையாறு, அண்ணா நகர் பகுதிகளில் ரூ. 1. 25 தான் மாநகராட்சி வரி வசூலிக்கிறது.
கண்டுகொள்ளாத மாநகராட்சி
இந்த வேறுபாட்டைக் களைய வேண்டும் என்பது சென்னை மாநகராட்சியில் இணைந்த புறநகர்வாசிகளின் கோரிக்கை. ஆனால் சென்னை மாநகராட்சியோ இதை கண்டு கொள்ளாமல் புறக்கணித்துக் கொண்டே வருகிறது.