புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.65 கோடி ஒதுக்கீடு! வரியில்லா பட்ஜெட் தாக்கல் செய்தார் ரங்கசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் 2014-15ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
நடப்பு நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி சட்டசபையில் தாக்கல் செய்து பேசியதாவது:
நடப்பு நிதியாண்டில் 2400 கோடி ரூபாய் ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. விவசாயத் துறைக்கு ரூ.102 கோடி ஒதுக்கப்பட்டு உற்பத்தி ஆர்வமுள்ள குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் மானியம் வழங்கப்படும்.
கூனிச்சம்பட்டு, கன்னியக்கோயில் மற்றும் மடுகரையில் விற்பனை கூடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இயந்திர படகுகள் வாங்க 10 மீனவர்களுக்கு 50 சதவீத மானிய தொகையாக 15 லட்சம் வரை உச்சவரம்பாக வழங்கப்படும்.
வணிகர்களுக்கு நலவாரியம் அமைப்பது பரிசீலிக்கப்படும். கூட்டுறவுத் துறைக்கு 40.75 கோடி ரூபாயும், வனவளம் மற்றும் வனவிலங்குத்துறைக்கு 2.90 கோடி ரூபாயும், மின் துறைக்கு 67 கோடி ரூபாயும், தகவல் தொழில்நுட்பத்திற்காக 12.50 கோடி ரூபாயும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழலிற்காக 2.25 கோடி ரூபாயும் வழங்கப்படும்.
தொழில்துறைக்காக 46.29 கோடி ரூபாயும், தொழிலாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறைக்காக 13 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்டாக் கல்வித்தொகை உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலனிற்காக 237 கோடி ரூபாயும், வயது முதிர்ந்த எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
தீயணைப்பு துறைக்கு 5.25 கோடி ரூபாயும், சுற்றுலா துறைக்கு 65.50 கோடி ரூபாயும், நகர மற்றும் கிராமப்புற அமைப்பிற்கு 317.87 கோடி ரூபாயும், பொதுப்பணித்துறைக்கு 373.44 கோடி ரூபாயும், போக்குவரத்து துறைக்கு 7.90 கோடி ரூபாயும், ஆதிதிராவிடர் நலதிற்காக 119 கோடி ரூபாயும், சமூக நலத்திற்காக 59.60 கோடி ரூபாயும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்காக 177.05 கோடி ரூபாயும், வருவாய் மற்றும் பேரிடர்களுக்காக 193 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரேசன்கார்டுதாரர்களுக்கு தீபாவளிக்கு 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கும் திட்டம் தொடரும். மேலும், புதுச்சேரி விடுதலை அடைந்து 60 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி விடுதலை நாளாக மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும். இவ்வாறு ரங்கசாமி அறிவித்தார்.
இதனிடையே முதல்வரின் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.