காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: ராஜபாளையத்தில் வீடு வீடாக அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
ராஜபாளையம்: மருத்துவர் அளித்த சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்கும் மருந்து கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ராஜபாளையத்தில் பரவி வரும் காய்ச்சலுக்கு இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மக்களின் அச்சத்தைப் போக்க அமைச்சர்கள் அங்கே முகாமிட்டுள்ளனர்.
அமைச்சர் ஆய்வு
ராஜபாளையம் நகராட்சி பகுதியில் வார்டு எண் 20, 21, 42 பாரதி நகர், அழகை நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 6.00 மணியிலிருந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஒவ்வொரு வீடாக சென்று வைரஸ் காய்ச்சல் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சிமிண்ட் தொட்டிகள், பிளாஸ்டிக் பொருட்கள், தேவையற்ற பொருட்கள் உள்ளதா என்று ஆய்வு செய்தார்.
மூடி வைக்கணும்
மேலும் டெங்கு கொசுவை பரப்பும் சிமிண்ட் தொட்டிகள், குடங்கள் ஆகியவற்றை மூடி வைக்கும்படி பொது மக்களுக்கு அறிவுறுத்துனார். டெங்கு கொசுக்கள் மூடிவைக்கப்படாத தேக்கி வைக்கப்படும் நல்ல தண்ணீர் தொட்டிகளில் தான் வளர்கின்றது என்று பொது மக்களிடம் எடுத்துரைத்தார்.
குப்பையை போடாதீங்க
இராஜபாளையம் நகராட்சியில் ஒவ்வொரு வார்டாக சென்று கழிவு நீர் வாய்க்கல், குப்பைகளை தேங்க விடாமல் பார்த்துக்கொள்ளுமாறு நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதோடு, அனைத்து பகுதிகளிலும் புகை மருந்து அடிக்கப்பட்டுள்ளதா போதிய சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா, பொது மக்களுக்கு வைரஸ் காய்ச்சலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பன போன்றவற்றை பொது மக்களிடம் கேட்டறிந்தார்.
நிலவேம்பு கசாயம்
பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய அமைச்சர், இராஜபாளையம் பகுதியில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முழுமையான அளவு அனைத்து மருத்துவ உபகரணங்களும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. போதுமான மருந்துகள் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் உள்ளது. அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் வாயிலாக இராஜபாளையம் பகுதியில் கொசுக்கள் பெரும் அளவு குறைக்கப்பட்டு வைரஸ் காய்ச்சல் பரவுவது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு அகற்றம்
நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பன்றிகள் பொது மக்கள் வசிக்குமிடங்களில் இருந்து முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பழைய இரும்பு, பழைய பாட்டில் போன்ற வியாபாரத்திற்கு முறையாக பராமரிப்பு செய்வதற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு முறையற்றவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போலி மருத்துவர்கள் கைது
சென்னையில் இருந்து மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு மருத்துவரின் மருத்துவ சீட்டு இல்லாமல் மருந்து வழங்கும் மருந்து கடைகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இராஜபாளையம் பகுதியில் இது வரை 5 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடும் நடவடிக்கை
கம்பவுண்டர்கள் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.