ஜெயலலிதாவே குற்றவாளிதானே.. டிடிவி தரப்பு பொளேர் வாதம்!
ஜெயலலிதா, சசிகலா இருவருமே குற்றவாளிகள் தான் என்று தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் சசிகலாவும் தண்டனை பெற்றவர்கள்தான். ஜெயலலிதா சிறையில் இருந்த போது பொதுச்செயலாளராக இருந்திருக்கிறார் அப்போது எதிர்க்காதவர்கள் சசிகலாவை மட்டும் எதிர்ப்பது ஏன் என்று டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை 31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அந்த கெடுவுக்கு ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் வழக்கு விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது.
டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் விஜய் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார். ஈபிஎஸ் அணியினர் தங்கள் தரப்பினருடன் இருந்த போது தாக்கல் செய்த ஆவணங்கள் பற்றி குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினர். அதேபோல ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் இணைந்த பின்னர் தாக்கல் செய்ய ஆவணங்களையும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
சசிகலா தற்காலிக பொதுச்செயலாளர்தான் என்றும் குற்றவாளியாக இருப்பதால் அவரை பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது என்பதும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வாதம். அதற்கு பதிலடி தரும் விதமாக இன்று டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் சசிகலாவும் குற்றவாளிகள்தான் என்று கூறினார். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்று சிறையில் இருந்த போதும் ஜெயலலிதா கட்சி பொதுச்செயலாளராக இருந்தார். அப்போது எதிர்க்காதவர்கள் இப்போது சசிகலாவை மட்டும் எதிர்ப்பது ஏன் என்று கேட்டார். தேர்தல் ஆணையத்தில் கார சாரமாக விவாதங்கள் நடைபெற்றன.