ஜல்லிக்கட்டு காளைகள் கவலையில் இருக்க... புத்துணர்வு முகாமில் யானைகள் ஹேப்பி அண்ணாச்சி!
சென்னை: தமிழகத்தில் இரண்டு விலங்குகள் தான் தற்போது "டாக் ஆப் தி டவுன்". ஒன்று காளைகள். மற்றொன்று யானைகள்.
பொங்கலுக்கு இன்னும் சரியாக ஒரு வார காலமே உள்ள நிலையில், இந்தாண்டாவது ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா என்ற குழப்பம் நீடித்து வருகிறது. ஜல்லிக்கட்டு இன்னும் உறுதியாகாத சூழ்நிலையிலும், காளைகள் தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டே வருகின்றன. மாடு பிடிக்கும் வீரர்களும் தீவிர பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் அருகே கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று தொடங்கியுள்ளது.
புத்துணர்வு முகாம்...
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் மற்றும் மடங்களைச் சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் ஆண்டு தோறும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
வெள்ளத்தால் தாமதம்...
வழக்கமாக டிசம்பர் மாதத்தில் துவங்கும் இந்த முகாம் வெள்ளம் காரணமாக இம்முறை சற்று தாமதமாக ஜனவரியில் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் அடுத்த மாதம் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.
யானைகள் பங்கேற்பு...
இந்த முகாமில் தமிழகத்தில் கோவில்கள் மற்றும் மடங்களைச் சேர்ந்த 43 யானைகளும், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில், தர்பாரண்யேஸ்வரர் கோவில் யானை உள்பட 45 யானைகள் முகாமில் பங்கேற்க உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனை...
48 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு நலவாழ்வு முகாமில் யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் கொடுக்கப்பட்டு, கால்நடை மருத்துவர்கள் மூலம் யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
ஜல்லிக்கட்டு...
ஜல்லிக்கட்டு போன்று இந்த யானைகள் முகாமிற்கு தடையேதுமில்லை. இதனால், யானைகள் உற்சாகமாக இந்த முகாமில் பங்கேற்றுள்ளன. ஆனால், காளைகளின் நிலைமை அப்படியில்லை. ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா என்பதே இன்னும் உறுதியாகாத நிலையில், வழக்கம் போல் காளைகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
கவலையில் காளைகள்...
ஒரே மாநிலத்தில் யானைகள் ஒருபுறம் முகாமில் குதூகலமாக இருக்க, ஜல்லிக்கட்டு இழுபறியில் மற்றொரு புறம் காளைகள் கவலையில் ஆழ்ந்துள்ளன எனலாம்.