முதலமைச்சரை டென்ஷன் ஆக்கிய தென்காசி திமுகவினர்! ஓயாத உட்கட்சி பஞ்சாயத்து! அடுத்தது என்ன?
தென்காசி: கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக தென்காசி சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், தனது வேன் அருகே திமுகவினர் சிலர் எழுப்பிய முழக்கத்தால் டென்ஷன் ஆகியிருக்கிறார்.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக மீண்டும் செல்லத்துரையை நியமிக்கக் கோரி, முதல்வர் வாகனம் அருகே நின்று கொண்டு அவரது ஆதரவாளர்கள் ஒரு சிலர் எழுப்பிய முழக்கமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
திமுகவில் மாவட்டச் செயலாளர் தேர்தல் என்பது முடிந்து போன விவகாரம். ஆனால் இன்னும் அதையே கையில் பிடித்துக் கொண்டு தென்காசி வடக்கு மாவட்ட திமுகவினர் சிலர் பஞ்சாயத்து செய்து வருகின்றனர்.

தென்காசி பயணம்
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் முறையாக 2 நாட்களுக்கு முன்னர் தென்காசி மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். அங்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சாலை மார்க்கமாக கார் மூலம் ராஜபாளையம் புறப்பட்டுச் சென்றார். அப்போது கடையநல்லூர் அருகே திமுகவினர் கொடுத்த வரவேற்பை ஏற்பதற்காக முதல்வர் தனது வாகனத்தை நிறுத்தினார்.

திடீர் முழக்கம்
அப்போது அங்கு திரண்டிருந்த தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் செல்லத்துரையின் ஆதரவாளர்கள், மீண்டும் செல்லத்துரையை மாவட்டச் செயலாளராக்க வேண்டும் என முழக்கமிட்டனர். இந்த முழக்கத்தால் முதல்வர் சற்று டென்ஷன் ஆகியிருக்கிறார். இருப்பினும் இது போன்று ஆயிரக்கணக்கான நிகழ்வுகளை பார்த்திருப்பதால் முதல்வர் அதைப்பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

பாச்சா பலிக்கவில்லை
இதனிடையே மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். தான் சற்று கோபப்பட்டிருக்கிறார். அண்மையில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர் தேர்தலில், தென்காசி வடக்கு மாவட்ட திமுக தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரி நீதிமன்றம் சென்றவர் செல்லத்துரை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் செல்லத்துரையை போன்று ஆயிரக்கணக்கான நிர்வாகிகளை பார்த்திருப்பதால் ஸ்டாலினிடம் அது எடுபடவில்லை.

ராஜா எம்.எல்.ஏ.
இதனால் தான் முதல்முறை சட்டமன்ற உறுப்பினரும், மிகவும் இளம் வயதுடையவருமான சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.ராஜாவை மாவட்டச் செயலாளராக ஆக்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இவரும் முதல்வர் தன் மீது நம்பிக்கை வைத்து வழங்கிய பதவிக்காக சுற்றிச் சுழன்று வருகிறார்.
இதனிடையே முதல்வரின் தென்காசி சுற்றுப்பயணத்தின் போது, உட்கட்சி பஞ்சாயத்து எதிரொலிக்கும் என ஒன் இந்தியா தமிழ் கடந்த 4ஆம் தேதி அன்றே செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications