சம்பாதிப்பது ரூ.400.. ஆட்டோவுக்கு மட்டும் ரூ.300.. கேரள எல்லை வரை பஸ் இயக்க தென்காசி மக்கள் கோரிக்கை
தென்காசி: கேரளாவில் கொரோனா குறைந்து வருவதால் கேரள மாநில எல்லை வரை தமிழக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தென்காசி, நெல்லை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று அடங்கி இருந்தாலும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 31,000-ஐ கடந்து சென்றது.
இதனால் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கும், தமிழகத்தில் இருந்து கேரளா செல்பவர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடிகளில் சோதனை

கூலி தொழிலாளர்கள்
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகவே தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் இடையே அரசு பேருந்துகள் இயங்கவில்லை. நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பலர் கேரளாவில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். இதில் தென்காசி மாவட்டத்தில் இருந்து மட்டும் கூலி தொழிலாளர்கள் பலர் செங்கோட்டை, புளியரை வழியாக கேரளாவின் புனலூர், கொல்லம் பகுதிகளுக்கு தினமும் பேருந்தில் வேலைக்கு சென்று திரும்பி வந்தனர்.

பேருந்துகள் இயக்க வேண்டும்
குறிப்பாக தமிழக எல்லையை ஒட்டியுள்ள ஆரியங்காவு, தென்மலை போன்ற கேரள பகுதியில் தேயிலை எஸ்டேட், ரப்பர் தோட்டங்களில் தென்காசி அதன் சுற்றுப்புற பகுதியை சேர்ந்தவர்கள் வேலைக்கு சென்று வந்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே கேரளாவுக்கு நேரடி பேருந்துகள் சேவை இல்லாததால் இவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். நேரடி பேருந்து சேவை இல்லாவிட்டாலும், தமிழக எல்லையான கோட்டைவாசல் வரை கேரள பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆட்டோவில் அதிக கட்டணம்
ஆனால் தென்காசி மற்றும் செங்கோட்டையில் இருந்து கோட்டைவாசல் செல்வதற்கு தமிழக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் கூலி தொழிலாளர்கள் செங்கோட்டை, புளியரை ஆகிய இடங்களில் இருந்து கோட்டைவாசல் வரை ஆட்டோவில் அதிக கட்டணம் கொடுத்து வேலைக்கு சென்று வருகின்றனர். செங்கோட்டையில் இருந்து கோட்டைவாசலுக்கு ஒரு நபருக்கு 200 ரூபாயும், புளியறையில் இருந்து கோட்டைவாசலுக்கு ஒரு நபருக்கு 100 ரூபாயும் ஆட்டோவில் வசூலித்து வருகின்றனர்.

வியாபாரிகள் அவதி
கேரளாவுக்கு வேலைக்கு சென்று வரும் கூலி தொழிலார்களுக்கு தினசரி சம்பளம் ரூ.400 ஆக இருக்கும்போது, ஆட்டோவுக்கே அவர்கள் ரூ.300 கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் கேரளாவுக்கு தினசரி வியாபாரம் செய்து வருபவர்களும் சம்பாதிப்பதில் பாதி வருமானத்தை ஆட்டோவில் கொடுத்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு தென்காசி, செங்கோட்டையில் இருந்து கேரள எல்லையான கோட்டைவாசல் வரை தமிழக அரசு பெருந்துகள் இயக்கப்பட்டன. அதன்பின்னர் கேரளாவில் கொரோனா அதிகம் காரணமாக பேருந்து சேவையை நிறுத்தி விட்டனர்.

மக்கள் கோரிக்கை
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது. எனவே தென்காசியில் இருந்து கேரளாவுக்கு நேரடி அரசு பேருந்து சேவை இல்லாவிட்டாலும், கோட்டைவாசல் வரை தமிழக அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என்று தென்காசி, நெல்லை மாவட்ட மக்கள், குறிப்பாக தினசரி வேலைக்கு சென்று வரும் கூலித் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கோட்டை-கொல்லம் பயணிகள் ரயில்
இதேபோல் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட செங்கோட்டை-கொல்லம் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது நெல்லையில் இருந்து தென்காசி, செங்கோட்டை வழியாக தினமும் இரவு கேரளாவுக்கு இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலால் தாங்கள் பயன் பெற முடியவில்லை என்று கேரளாவுக்கு தினசரி வேலைக்கு சென்று வருபவர்களும், வியாபாரிகளும் கூறுகிறார்கள். எனவே பகலில் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications