திண்டிவனம் அருகே எதிர்ப்பை மீறி டாஸ்மாக் மதுக்கடை திறந்த அரசு... உடைத்து நொறுக்கிய மக்கள்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே புதியதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் அரசு மதுபானக் கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம்: பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அரசு திறந்த டாஸ்மாக் மதுபானக் கடை அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் திண்டிவனம் அருகே நடந்துள்ளது.
நெடுஞ்சாலைகள் ஓரமாக இருந்த டாஸ்மாக் கடைகளை உச்சநீதிமன்றம் காலவரையறை கொடுக்காமல் மூடச் சொன்னதால் தமிழக அரசு வேறு வழியின்றி மூடியது.அதன்படி 3000 திற்கும் மேற்பட்ட கடைகளை டாஸ்மாக் நிர்வாகம் சொல்லாமல் கொள்ளாமல் திடுமென மூடியது.
அதனால் திண்டாட்டம் கண்ட 'மதுபிரியர்களின் நலனுக்காக' கிராமப் பகுதிகளில் புதிய கடைகளை திறப்பதில் தமிழக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அதற்காக இடங்களைத் தேர்வு செய்வதில் இருந்து கடைகளைத் திறப்பது வரை டாஸ்மாக் அதிகாரிகள் 24 மணிநேரமும் பிசியாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க பொதுமக்கள் ஒப்புக்கொள்வதில்லை. சுடுகாடு அருகில் உட்பட எந்த இடத்தில் டாஸ்மாக் கடை போட்டாலும் அதை உடனடியாக முற்றுகையிட்டு,போரட்டம் நடத்தி,சரக்கு பாட்டில்களை அடித்து உடைத்து டாஸ்மாக் அழிப்புப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.
இதில் சாதிமதம் பாராமல் கிராமமக்கள் ஒன்றாக இணைந்து செயல்படுகிறார்கள் என்பதில்,போலீஸ் முதல் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் வரை உள்ளுக்குள் ஆட்டம் கண்டு கிடக்கிறார்கள் என்பது தனிக்கதை. இது குறித்து நோட் போட்ட உளவுத்துறை, டாஸ்மாக் கோபத்தை பட்டியலிட்டுள்ளது. இதில் முதல்வர் அலுவலகம் வரை அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் மதுபான கடையைத் திறந்தது தமிழக அரசு. இதனை ஏற்றுக்கொள்ளாத கிராம மக்கள் ஒன்று திரண்டு இன்று டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு மதுபாட்டில்கள் வாங்க வந்தவர்களை பொதுமக்கள் விரட்டியடித்தனர்.
மேலும் கடையின் உள்ளே நுழைந்த கிராம பெண்கள் மது புட்டிகள் அடங்கிய அட்டைப்பெட்டிகளை வெளியே தூக்கிப்போட்டு உடைத்து நொறுக்கினர். அதனைக் கண்ட போலீசார் அந்தப்பெண்களை இழுத்து வெளியே தள்ளினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடுபவர்கள் மீது தடியடி கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும் போலீசார், போராட்டக் காரர்களிடம் கடுமை காட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சிகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.